சென்னை எலியட்ஸ் பீச்சில் விளையாடிய 3 என்ஜினியர்கள் கடலில் மூழ்கி பலி
சென்னை: சென்னை எலியட்ஸ் கடற்கரையில் விளையாடியபோது கடலில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற பெங்களூரைச் சேர்ந்த 3 என்ஜினியர்கள் கடலில் மூழ்கி பலியாகினர்.
சென்னை துரைபாக்கம் பகுதியில் உள்ள டிசிஎஸ் ஐ.டி. கம்பெனியில் பணிபுரியும் 10 என்ஜினியர்கள் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள எலியட்ஸ் கடற்கரையில் பந்து வீசி விளையாடினர். ஜாலியாக விளையாடி கொண்டிருந்த போது பந்து கடலில் விழுந்தது.
அதை எடுக்க 3 பேர் கடலில் இறங்கினர். பந்து கடல் அலையில் ஆழமான பகுதிக்கு சென்றது. இதனையடுத்து 3 பேரும் பந்தை நோக்கி ஆழமான பகுதிக்கு சென்றனர். அப்போது வந்த பெரிய அலையில் அந்த 3 பேரையும் கடலுக்குள் இழுத்து சென்றது. இதனை கண்ட மற்ற 7 பேரும் அவர்களை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இறுதியில் கடலில் மூழ்கி 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன் உத்தரவின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். விசாரணையில் கடலில் மூழ்கி இறந்தவர்கள் பெங்களூர் காய்த்ரி நகரைச் சேர்ந்த பிரவீன்(21), சென்ராவ் பகுதியைச் சேர்ந்த சக்தி(21) மற்றும் ஆனந்த் பூஷன்(21) எனத் தெரிய வந்தது.
கரை ஒதுங்கிய சக்தி மற்றும் பிரவீன் ஆகியோரின் உடல்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனந்த் பூஷனின் உடல் இன்னும் கிடைக்கவில்லை.
கடற்கரையில் 10 பேரும் விளையாட ஆரம்பித்த போதே கடற்கரை பாதுகாப்பில் ஈடுபட்ட போலீசார் அங்கிருந்து அவர்களை விரட்டியுள்ளனர். ஆனால் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து அங்கேயே விளையாடியதால் கடலில் சிக்கி 3 பேர் பரிதாபமாக இறந்துள்ளதாக தெரிகிறது.