ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் யாருக்கும் சலுகை காட்ட முடியாது- அத்வானி
ஊழலை ஒழிக்கக் கோரி ரத யாத்திரை மேற்கொண்டுள்ள அத்வானி நேற்று பெங்களூர் வந்தார். அவரது வருகையை எதிர்த்து காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படிப் பரபரப்பான நிலையில் பெங்களூர் வந்த அத்வானி, தேசியக் கல்லூரி மைதானத்தில் நடந்த கூட்டத்தில் பேசினார். அங்கு எதியூரப்பா ஆதரவாளர்கள் பெரிய அளவில் வரவில்லை. இதையடுத்து தனது பேச்சின்போது எதியூரப்பா மற்றும் அவரது ஆதரவாளர்களுக்குக் கொட்டு வைப்பது போல பேசினார் அத்வானி.
அவர் பேசுகையில், ஊழலை எதிர்த்துப் போராடும்போது ஆள் பார்த்து போராட முடியாது. நாம் ஊழலுக்கு எதிராக போராடுகிறோம் என்றால் அதில் யாருக்கும் சலுகை காட்ட முடியாது. சலுகைக்கும், மறு பரிசீலனைக்கும், ஆதரவுக்கும் இங்கு இடமில்லை. இதுதான் எனது நிலை.
கர்நாடகத்தில் சுரங்க ஊழல் தொடர்பாக லோக் ஆயுக்தா ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. உடனடியாக நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்.எந்த தாமதமும் செய்யவில்லை. அதேசமயம், புகார்கள் மட்டும் ஒருவரை குற்றவாளி என்று சொல்ல போதுமானதல்ல. அவை நிரூபிக்கப்பட வேண்டும் என்றார் அத்வானி.
நேற்று நடந்த கூட்ட மேடையில் எதியூரப்பாவின் புன்னகைத்த முகத்துடன் கூடிய படம் பெரிதாக இடம் பெற்றிருந்தது. அதன் பின்னணியில் எதியூரப்பாவுக்கு அட்வைஸ் செய்வது போல அத்வானி பேசியது வித்தியாசமாக இருந்தது.
மேலும், சட்டவிரோதமாக நில வகைப்படுத்துதல் அறிவிப்பு செய்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள போக்குவரத்து அமைச்சர் அசோக்கும் அத்வானி பேசிய மேடையில் இடம் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.