குமரி கடலில் புயல் சின்னம்: குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகுதியில் புதிய காற்றுழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளதால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறக்கூடும் என்பதால் அந்த 3 மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது வலுவடைந்துள்ளது.
இது புயலாக மாறக்கூடும் என்பதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முழுவதும் மழை பெய்தது. இரவிலும் விடிய விடிய மழை பெய்தது.
இன்றும் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
தென்மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருவதால் வறண்டு கிடந்த அணைகளும், குளங்களும் நிரம்பி வருகின்றன. தொடர்ந்து மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன.