விதிமீறிக் கட்டப்பட்ட கட்டடங்கள் மீது சிஎம்டிஏ மூலம் நடவடிக்கை தொடரும்- தமிழக அரசு
சென்னை தி.நகரில் நேற்று அதிரடியாக களம் இறங்கிய சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் 120க்கும் மேற்பட்ட கடைகளைப் பூட்டி சீல் வைத்தனர். இந்த கடைகள் உள்ள கட்டடங்களில் பல்வேறு விதிமீறல்கள் நடைபெற்றிருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதை எதிர்த்து தி.நகர் வியாபாரிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் வாதாடுகையில், விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதால்தான் இந்த நடவடிக்கையை சிஎம்டிஏ எடுத்து வருகிறது. மேலும் இதற்கு உச்சநீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது. எனவே இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் விளக்கம் அளிக்குமாறு மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
சிஎம்டிஏவின் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்கவில்லை என்பதால் மேலும் பல வர்த்தக நிறுவனங்களை சிஎம்டிஏ மூடி சீல் வைக்கும் நடவடிக்கையில் இறங்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.