கூடங்குளத்தில் தொட்டில் கட்டி போராட்டம்: மத்திய அரசுக்கு போராட்டக்குழு நிபந்தனை
கூடங்குளம்: கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளை நிறுத்தக்கோரி இடிந்தகரையில் மீனவ கிராம மக்கள் பச்சிளம் குழந்தைகளை தொட்டிலில் போட்டு நூதன போராட்டம் நடத்தி வருகின்றனர். அணுமின் நிலையப் பணிகளை நிறுத்தினால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்பு தருவோம் என்றும் போராட்டக்குழுவினர் நிபந்தனை விதித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் கட்டப்பட்டு வரும் அணுமின் நிலையம் செயல்படத் தொடங்கினால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று கூறி மீனவர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசும் அணுமின் நிலையப் பணிகளை நிறுத்தக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதனையடுத்து மத்திய அரசு போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் உடன்பாடு எட்டப்படாததை அடுத்து இடிந்தகரையில் உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் போராட்டக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக போராட்டத்தின் 15வது நாளான இன்று மீனவகிராம மக்கள் தங்கள் வீட்டில் உள்ள பச்சிளம் குழந்தைகளை உண்ணாவிரதப் பந்தலில் தொட்டில் கட்டிப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 40க்கும் மேற்பட்ட தொட்டில்கள் அங்கு கட்டப்பட்டுள்ளதால் பச்சிளம் குழந்தைகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
வன்முறையைத் தூண்ட முயற்சிக்கிறார் நாராயணசாமி: உதயகுமார்
இதற்கிடையே கூடங்குளம் போராட்டத்தில் வன்முறையைத் தூண்ட மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி முயற்சிப்பதாக கூடங்குளம் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
மத்திய அரசானது போராட்டக் குழுவினரை இந்திய பிரஜைகளாக மதிக்க வேண்டும். வெளிநாடுகளிடம் பணம் வாங்கிக்கொண்டு போராட்டம் நடத்துவதாக கொச்சைப்படுத்தக் கூடாது. அணுமின் நிலையப் பணிகளை உடனடியாக நிறுத்தினால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்பு தருவோம்.
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக நாங்கள் 1 மாதமாக போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் அணுசக்தி துறையோ, மத்திய அரசோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அணுசக்தி துறை தமிழக மக்களை பயமுறுத்துகிறது. கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றி அணுசக்தி துறை உண்மையைக் கூற வேண்டும்.
அணு உலையில் எரிபொருள் நிரப்பட்ட ரியாக்டரை வைத்துவிட்டார்களா, இல்லையா என்பதை விளக்க வேண்டும். மக்கள் அனுமதி இல்லாமல் எரிபொருள் வைத்துவிட்டால் அது தேசதுரோக குற்றமாகும். இது குறித்து நாங்கள் எங்கள் கண்டனத்தை மாவட்ட கலெக்டர் மூலம் தெரிவிப்போம்.
நாங்கள் அணுமின் நிலையத்துக்கு வேலைக்கு செல்பவர்களை யாரையும் மறிக்கவில்லை. மத்திய அரசு தான் தமிழக அரசின் உத்தரவை மதிக்காமல் செயல்படுகிறது. நாங்கள் வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுவதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி பேசி வருகிறார். இதன் மூலம் அவர் போராட்டத்தில் வன்முறையை தூண்ட பார்க்கிறார். இது குறித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்போம்.
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை உடனடியாக மத்திய அரசு முழுமையாக ஏற்று அமல்படுத்த வேண்டும் என்றார் அவர்.
மேலும் நெல்லை மாவட்ட ஆட்சியர் செல்வராஜிடம் போராட்டக்குழுவினர் மனு ஒன்றையும் அளித்துள்ளனர்.