கோவையில் வரலாறு காணாத மழை- பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
கோவை: கோவையில் கனமழை பெய்துவருவதால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று காலையில் தொடங்கிய மழை மாலை வரை நீடிப்பதால் நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. பல ஆண்டுகளுக்குப்பின் இப்படியொரு மழை பெய்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் பகுதியில் கல்லுக்குழி என்ற இடத்தில் வீடுகளுக்குள் வெள்ளநீரும் கழிவுநீரும் புகுந்துள்ளதால் மக்களின் இயல்புவாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
நிர்மலா கல்லூரி அருகே மழைநீர் வெள்ளம் போல தேங்கியுள்ளதால் கல்லூரிக்கு வந்த மாணவிகள் பாதிக்கப்பட்டனர். பத்துநாட்களாக மழை பெய்வதால் தேர்வு எழுதுவது சிரமம் ஏற்பட்டுள்ளதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
உக்கடம், பூமார்க்கெட், சிவராம் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளக்காடாகியுள்ளதால் மக்கள் பெரும அவதிக்குள்ளாகியுள்ளனர். கோவை நகரமே வெள்ளக்காடாக காட்சி அளிப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
அவினாசி சாலையில் மேம்பாலத்திற்குக் கீழே இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
கனமழை நீடிப்பதால் கோவை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.