இனி காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய மாட்டாராம் அன்னா ஹசாரே!
ஊழல் எதிர்ப்பு என்று போராட்டத்தை ஆதரித்து மக்களின் மனங்களைக் கவர்ந்த ஹசாரேவின் போக்கு பின்னர், காங்கிரஸ் எதிர்ப்பு என்று மாறிவிட்டது. ஹரியாணாவில் நடந்த இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளருக்காக அவர் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். இதனால் அவரது அரசியல் நடுநிலைமை குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன.
மேலும் அவரது குழுவினர் செய்த பல அதிகார துஷ்பிரயோகங்கள் ஹசாரேவின் பெயரைக் கெடுத்து வருகின்றன. இதனால் அவரை ஆரம்பத்தில் ஆதரித்த பலரும் இப்போது அவரை எதிர்க்க ஆரம்பித்துவிட்டனர்.
இந் நிலையில், தனது பெயரை சரி செய்து கொள்ள நடுநிலையுடன் நடந்து கொள்ளப் போவதாக ஹசாரே கூறியுள்ளார்.
வரும் நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படாவிட்டால், கூட்டத்தொடரின் கடைசி நாளன்று மீண்டும் உண்ணாவிரதத்தை துவக்குவேன் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரமதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மட்டும் இனி தேர்தல் பிரசாரம் இனி செய்யப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் ஹசாரே கூறியுள்ளதாவது: மத்திய அரசில் பொறுப்பு வகிப்பவர்களும் காங்கிரஸ் கட்சியில் பொறுப்பான பதவியில் உள்ளவர்களும் ஆளுக்கு ஒரு கருத்தைக் கூறி வருகின்றனர். இதனால் ஊழலை அடியோடு ஒழிக்க நாங்கள் கோரிவரும் வலுவான ஜன லோக்பால் மசோதா நிறைவேறுமா என்பதில் சந்தேகம் எழுகிறது.
குளிர்கால கூட்டத்தொடருக்குள் ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவோம்.
5 மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் நான் ஆதரவு தெரிவிக்க மாட்டேன். கட்சி கண்ணோட்டம் பார்க்காமல் நல்லவர்களையே தேர்ந்தெடுங்கள். ஊழல்வாதிகள், குண்டர்கள், கொள்ளையர்களை ஆதரிக்க வேண்டாம் என்று மட்டுமே மக்களிடம் கோரிக்கை வைப்பேன் என்று கூறியுள்ளார் ஹசாரே.
பிரதமருக்கு, ஹசாரே எழுதிய இந்திக் கடிதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு நகல், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும், சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்கி டிசம்பர் 23ம் தேதி முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மெளன விரதம் விரைவில் ஓவர்:
இந் நிலையில் அக்டோபர் 16ம் தேதி முதல் மெளன விரதம் இருந்து வரும் ஹர். சாரே அதை விரைவில் கைவிடவும் முடிவு செய்துள்ளார்.
மேலும் லோக்பால் மசோதா குறித்து ஆய்வு செய்து வரும் நாடாளுமன்ற நிலைக் குழு முன் ஹசாரே குழுவினர் நாளை இரண்டாவது முறையாக ஆஜராகி, தங்கள் கருத்தை தெரிவிக்க உள்ளனர்.