ஒபுலாபுரம் சுரங்க முறைகேடு- நேரில் விளக்கமளிக்க ஜெகன் மோகன் ரெட்டிக்கு சிபிஐ சம்மன்
பெல்லாரி: ஓபுலாபுரம் சுரங்கமுறைகேடு குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இதனையடுத்து அவர் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி, கர்நாடக-ஆந்திரா எல்லைப் பகுதியில் சட்ட விரோத சுரங்க தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில் கடந்த செப்டம்பர் மாதம் 5- கைது செய்யப்பட்டார். அவர் மீதான சுரங்க முறைகேடு புகார் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஐதராபாத்தில் இருந்து சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் பெல்லாரியில் ஜனார்த்தன் ரெட்டி வீடு அலுவலகங்களில் சோதனை நடத்தி அவரை கைது செய்தனர். அவருடன் மைத்துனர் ஸ்ரீனிவாஸ் ரெட்டியும் கைதானார். இருவரையும் ஐதராபாத் கொண்டு சென்று விசாரித்த அதிகாரிகள் பின்னர் சிறையில் அடைத்தனர்.
ஜனார்த்தன் ரெட்டியைத் தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டியும் இந்த வாரம் கைது செய்யப்பட உள்ளார். இதற்கான நடவடிக்கையில் சி.பி.ஐ. தீவிரமாக இறங்கியுள்ளது. இதனையடுத்து ஒபுலாபுரம் சுரங்கமுறைகேடு வழக்கில் சிபிஐயின் பிடி ஜெகன் மீது இறுகியுள்ளது. இந்த வழக்கில் வெள்ளிக்கிழமையன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவேண்டும் என்று புதன்கிழமையன்று சிபிஐ சம்மன் அனுப்பியது. இதனையடுத்து ஜெகன் கைது செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள்
மறைந்த ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகனான ஜெகன் மோகன் ரெட்டி காங்கிரசில் இருந்து விலகி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். கடப்பா எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் இமாலய ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி ஏராளமான சொத்துக்களை குவித்து இருப்பதாக புகார் கூறப்பட்டது. இதுபற்றி சிபிஐ விசாரணைக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவரது வீடு மற்றும் நிறுவனங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. ஜெகன்மோகன் ரெட்டியின் நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் பல கோடி சொத்துக்களுக்கு ஆவணங்களும், கணக்கில் காட்டப்படாத சொத்துக்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் சி.பி.ஐ. ஜெகன்மோகன் ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications