2 நாளில் மழை படிப்படியாக குறையும்- வானிலை மையம் தகவல்
சென்னை: ஒரு நாள் இடைவெளிக்குப் பின்னர் இன்று மீண்டும் சென்னையில் இடி மின்னலுடன் கன மழை கொட்டி்த தீர்த்தது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று நல்ல மழை பெய்த நிலையில் அடுத்த 2 நாட்களில் மழையின் அளவு படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த ஒருவாரகாலமாக சென்னை உள்பட தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், உட்புறப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. புதன்கிழமை சற்று ஓய்ந்திருந்த மழை வியாழக்கிழமையான இன்று இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கியது.
மின்சாரம் துண்டிப்பு
திருவொற்றியூர், தாம்பரம், ராயபுரம், சேப்பாக்கம், குரோம்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் காலை முதல் கன மழை பெய்து கொட்டியது.
மயிலாப்பூரில் காலை 10 மணிமுதல் தொடர்ந்து கனமழை பெய்தது. அடுத்தடுத்து இடி இடித்ததால் ஒரு சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மழை காரணமாக சாந்தோம், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளானார்கள்.
ஏற்கனவே கன மழை காரணமாக சென்னை மாநகரின் சாலைகள் பலவும் பெயர்ந்து பல்லைக் காட்டியபடி உள்ளன. இதனால் வாகனங்கள் செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது மறுபடியும் மழை வெளுத்து வாங்க ஆரம்பித்திருப்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நேற்று கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனால் நேற்று காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. ஆனால் நேற்று பல பகுதிகளில் நல்ல வெயில் அடித்தது. இன்று பள்ளிகள் திறந்துள்ள நிலையில் மழை வெளுத்துக் கட்டி வருகிறது.
நெல் அறுவடை பாதிப்பு
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் அறுவடை செய்யமுடியாமல் மழை கொட்டிவருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வீரணம் ஏரிக்கு விநாடிக்கு ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஊட்டி, குன்னூர் பகுதிகளில் பெய்து வரும் மழையால் காய்கறி அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் அவற்றின் விலை இரண்டு மடங்காகியுள்ளது.
மழை குறையும்
இதனிடையே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடித்தாலும் இன்னும் 2 நாட்களில் மழையின் அளவு படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக பாலக்கோட்டில் 11 செமீ மழை பெய்துளளது. பாபநாசம், பனம்பூர் தலா 9, குடவாசல், குமாரபாளையத்தில் தலா 7 செமீ மழை பெய்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழகம், புதுச்சேரியில் பரவலாக கன மழை பெய்யலாம்.
அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். சென்னையில் ஓரி்ரு சமயங்களில் கன மழை பெய்யும்.
அடுத்த 2 நாட்களில் மழையின் அளவு படிப்படியாக குறையக் கூடும் என்று மையம் தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பனிபொழிவு துவக்கம்
நெல்லை மாவட்டத்தில் பனிப்பொழிவு துவங்கியுள்ளது. இதனால் தொடர்ந்து மழை பெய்யுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில் திடீரென மழை குறைந்தது. மாவட்டத்தில் ஒரு சில இடங்களில்
மட்டும் 1 மில்லி மீட்டர் அல்லது 2 மில்லி மீட்டர் மழை பெய்தது.
அதிகபட்சமாக பாபநாசத்தில் 9 மில்லி மீட்டரும், செங்கோட்டையில் 3 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மழை குறைந்ததையடுத்து அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு நெல்லை மாவட்டம் முழுவதும் ஆங்கங்கே பனி மூட்டம் சூழ்ந்தது. இன்று காலை 7 மணி அளவிலும் சாலைகளில் தூரத்தில் வருவது
தெரியாமல் பனி மூடியது. மழைக்காலத்தில் பனி பெய்யத் தொடங்கினால் கனமழை வராது என்பது ஜதீகம். இதனால் மழை மேலும் நீடிக்குமா அல்லது இப்படியே ஏமாற்றி
விடுமா என்று விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.