அன்னா குழுவில் நன்கொடை அளித்தது சாந்தி பூஷன் மட்டுமே: 6 மாதத்தில் ரூ.2.51 கோடி வசூல்
கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதியில் இருந்து இதுவரை அன்னா குழுவினர் ரூ.2.51 கோடி நன்கொடை வசூலித்துள்ளனர். அதில் நன்கொடை அளித்த ஒரே அன்னா குழு உறுப்பினர் முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷன் தான். அவர் ரூ. 4 லட்சம் கொடுத்துள்ளார்.
அன்னா போராட்டத்திற்கு ஜிந்தால் அலுமினியம் லிமிடெட்டின் சீதாராம் ஜிந்தால் தான் அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். ராம்லீலா மைதானத்தில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 25,023 பேர் உள்பட 27,505 பேர் அன்னாவின் போராட்டத்திற்கு நன்கொடை அளித்துள்ளனர். அதில் 400 பேர் ரூ.10,000க்கு மேல் அளித்துள்ளனர் என்று அன்னா குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது,
காசோலை, ரொக்கம் மற்றும் ஆன்லைன் டிரான்ஸ்பர் மூலம் ரூ. 13.64 லட்சம் கிடைத்துள்ளது. ராம்லீலா மைதானத்தில் நடந்த போராட்டத்தின்போது மணி ஆர்டர் மூலம் ரூ.26,848 கிடைத்துள்ளது. ரூ.69,411 பல்வேறு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 6 மாதத்தில் ரூ.2.94 கோடி வசூலானது. ஆனால் அதில் ரூ.42.55 லட்சத்தை திருப்பிக் கொடுக்கவிருக்கிறோம். ஏனென்றால் அந்த பணத்தை கொடுத்தவர்கள் தங்களுடைய முழு விவரங்களைத் தெரிவிக்கவில்லை.
23,138 பேர் ரூ.1000 மற்றும் அதைவிட குறைந்த அளவில் நன்கொடை அளித்துள்ளனர். சிலர் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாத்தித்த பணத்தில் ரூ.1,2 மற்றும் 5 கொடுத்துள்ளனர் என்றனர்.