ஜனவரி 5க்கு மேல் சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: பிரவீண்குமார்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் செய்து தயார் நிலையில் இருக்குமாறு நெல்லை கலெக்டருக்கு தமிழக தலைமை தேர்தல் அலுவலர் பிரவீண் குமார் உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 5ம் தேதிக்குப் பிறகு தான் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அவர் தெரிவி்ததுள்ளார்.
அமைச்சரும், நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருப்பசாமி உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 22ம் தேதி காலமானார். இதனால் சட்டசபையில் ஒரு எம்.எல்.ஏ. இடம் காலியாக உள்ளது. ஒரு எம்.எல்.ஏ. மரணம் அடைந்தாலோ, பதவியை ராஜினமா செய்தாலோ அடுத்த 6 மாதங்களுக்குள் அந்த தொகுதிக்கு தேர்தல் நடத்த வேண்டும். இதனால் சங்கரன்கோவில் இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ளது.
தற்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் ஆகிய பணிகள் நடந்து வருகிறது. இது குறித்து தலைமை தேர்தல் அலுவலர் பிரவீண்குமார் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.
நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜிடம் வாக்காளர் பட்டியல் பணிகள் தொடர்பாக பிரவீண்குமார் ஆலோசனை நடத்தினார். அப்போது சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. அது தொடர்பான முன்னேற்பாடுகளை செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5ம்தேதி வெளியிடப்பட உள்ளது. எனவே, அதற்கு பின்பே இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக அவர் கலெக்டரிடம் தெரிவித்தார்.