மாநில மொழிப் பத்திரிகைகளுக்கு நல்ல வரவேற்பு... ஆங்கில இதழ்கள் தேக்கம்!
அச்சு ஊடகத்துறையின் நிலை மற்றும் எதிர்காலம் குறித்து கேபிஎம்ஜி நிறுவனம் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது.
இதில், பிராந்திய மொழிப் பத்திரிகைகள் சர்க்குலேஷன், வாசகர் எண்ணிக்கை என பல வகையிலும் வளர்ந்து வருகின்றன. 2010-15 காலகட்டத்தில் இந்தி போன்ற மாநில மொழி பத்திரிகைகள் வளர்ச்சி 10.8 முதல் 12.3 சதவீதமா இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் ஆங்கில மொழிப் பத்திரிகைகள் 7.5 சதவீத வளர்ச்சி கண்டாலே பெரிய விஷயம்தான்.
வருவாய் ஈட்டுவதிலும் பிராந்திய மொழிப் பத்திரிகைகளே முதலிடம் வகிக்கின்றன. மொத்த வருவாயில் 60 சதவீதம் வரை இந்தி உள்ளிட்ட மாநில மொழிப் பத்திரிகைகள் பெறுகின்றன. வரும் காலத்தில் இது 64 சதவீதமாக உயரும்.
பிராந்திய மொழிப் பத்திரிகைகளின் இந்த வளர்ச்சிக்குக் காரணம், வாசகர்களுடன் அவை நெருக்கமாக இருப்பதுதான். அந்ததந்த மாநில மக்கள் தங்கள் மொழிப் பத்திரிகைகளுக்குதான் முக்கியத்துவம் தருகிறார்கள். ஆங்கிலப் பத்திரிகைகள் வாங்குவதில் அவர்களுக்கு ஆர்வமில்லை. இன்னொன்று, உள்ளூர் பத்திரிகைகள் அந்த மாநில செய்திகளை விரிவாக வெளியிடுகின்றன. ஆங்கிலப் பத்திரிகைகளோ சில வரிகளில் முடித்துவிடுகின்றன.
அதேபோல, கிராமப் புறங்களில் ஆங்கிலப் பத்திரிகைகள் கவனம் செலுத்துவதில்லை. இதனால்தான் அவை தேக்க நிலையில் உள்ளன," என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜாக்ரன் பிரகாஷன் சிஇஓ சஞ்சய் குப்தா, "ஆங்கிலப் பத்திரிகை படிப்பவர் எண்ணிக்கை ஓரளவு கூடினாலும், பெரும்பாலானோர் தங்கள் மொழிப் பத்திரிகையைப் படிக்கவே விரும்புகின்றனர். காரணம், பாரம்பரிய உணர்வு, மொழிப் பற்று. இதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் மாநில மொழிப் பத்திரிகைகள்," என்றார்.
டைம்ஸ் ஆப் இந்தியா குழும தலைவர் பாஸ்கர் தாஸ் கூறுகையில், "நிகழ்வுகளை வேகமாகத் தரும் தன்மையை செய்தித் தாள்கள் இழந்துவிட்டன என்பதுதான் உண்மை. காரணம் செய்தித் தாள்கள் ஒருமுறை வெளியாகிவிட்டால், அடுத்த நாள் வரை காத்திருக்க வேண்டும். எனவே, உடனுக்குடன் செய்திகளை அப்டேட் செய்யும் வகையில் புதிய வழி காண வேண்டும்," என்றார்.