நஷ்டம் ஏற்படுத்தும் 'ரூட்களில்' விமானங்களை இயக்க வேண்டியது எங்கள் கடமையா என்ன?: விஜய் மல்லையா
இந்த நிறுவனத்தின் மோசமான நிதி நிலைமையைக் காரணம் காட்டி பைலட்க்ள், ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்காத அந்த நிறுவன அதிபர் விஜய் மல்லையா, விமானங்களுக்கு எரிபொருள் வழங்கிய மத்திய அரசின் பெட்ரோலிய நிறுவனங்களுக்கும் ரூ. 600 கோடி அளவுக்கு கட்டணத்தை செலுத்தவில்லை.
மேலும், விமான நிலையங்களை பயன்படுத்தியதற்கும் அந்த நிறுவனம் மத்திய அரசுக்கும், தனியார் விமான நிலையங்களுக்கும் கட்டணம் செலுத்தவில்லை.
இந் நிலையில் தினந்தோறும் ஏராளமான விமானங்களை ரத்து செய்து பயணிகளை திண்டாட வைத்துள்ள மல்லையா, தனது நிறுவனத்துக்கு மத்திய அரசின் நிதியுதவியை கோரியுள்ளார். இதற்கு மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் வயலார் ரவியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மூலமாக, கிங்பிஷர் நிறுவனத்துக்கு நிதியுதவி செய்ய வைக்க வங்கிகளிடம் பேசவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கான வேலைகளும் ஆரம்பித்துவிட்டதாகத் தெரிகிறது.
தயங்கும் வங்கிகள்:
ஆனால், ஏற்கனவே விஜய் மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனத்தில் முதலீடு செய்து ஆயிரக்கணக்கான கோடிகளை இழந்துவிட்ட ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ உள்ளிட்ட 13 வங்கிகள் மூண்டும் அதில் பணத்தைக் கொட்ட தயாராக இல்லை.
கிங்பிஷர் நிறுவனம் தடுமாறி வருகிறது என்றவுடனேயே அதன் பங்குகள் வெகு வேகமாக சரிந்து வருகின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு அதன் விலை சரிந்துவிட்டது. அத்தோடு, இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த ஸ்டேட் வங்கி மற்றும் ஐசிஐசியை வங்கிகளின் பங்கு விலையும் சரிந்துவிட்டது.
ரூ. 2,000 நிதி திரட்டும் கிங்பிஷர்:
இந் நிலையில் சந்தையில் மேலும் ரூ. 2,000 கோடியைத் திரட்டும் வேலையில் இறங்கியுள்ளார் விஜய் மல்லையா. ஏற்கனவே கிங்பிஷர் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள வங்கிகளும் இந்த பங்குகளை வாங்க வேண்டும் என்று மல்லையா கோரியுள்ளார். அவரது இந்தக் கோரிக்கையைத் தான் மத்திய அமைச்சர் வயலார் ரவி ஆதரித்து வருகிறார். ஆனால், ஏற்கனவே இந்த நிறுவனத்தின் 23 சதவீத பங்குகளை வாங்கி கையை சுட்டுக் கொண்ட வங்கிகள், மீண்டும் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்று தெரிகிறது.
அடமானம் வைக்கும் திட்டமில்லை-மல்லையா:
இதற்கிடையே, கிங்பிஷர் நிறுவனத்தின் இன்றைய சிக்கலுக்கு எரிபொருள் விலை உயர்வு தான் முக்கிய காரணம் என்றும் விஜய் மல்லையா கூறியுள்ளார். மேலும் 130 பைலட்டுகள் ராஜினாமாவால் தான் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன என்ற தகவலையும் அவர் மறுத்துள்ளார். பைலட்டுக்கள் இரவோடு இரவாக ராஜினாமா செய்துவிட்டுப் போக முடியாது. 6 மாத நோட்டீஸ் கொடுத்துவிட்டுப் போக முடியும் என்று கூறியுள்ள மல்லையா, நிறுவனத்தின் நிதிப் பிரச்சனையை சமாளிக்க பெங்களூரில் உள்ள தனது சொத்துக்கள் எதையும் வங்கிகளில் அடமானம் வைக்கும் திட்டம் இல்லை என்றும், இவ்வாறு வரும் செய்திகள் தவறானவை என்றும் கூறியுள்ளார்.
மேலும், விமானத்துறையில் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்யும் வகையில் விதிகளை மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பயணிகளுக்கு இ-மெயிலில் விளக்கம்:
இதற்கிடையே, தனது விமான சேவையை அடிக்கடி பயன்படுத்தி வரும் கிளப் மெம்பர்களுக்கு கிங்பிஷர் அனுப்பியுள்ள இ-மெயிலில், இந்திய விமானத்துறை அதிக செலவு, குறைந்த வருவாய் என்ற வட்டத்தில் சிக்கித் தவித்து வருகிறது. இதிலிருந்து மீள, சில திட்டங்களை கிங்பிஷர் முன் வைத்துள்ளது. அதன்படி சில விமானங்கள் மறுகட்டமைப்பு செய்யப்பட வேண்டியுள்ளது. இதனால் தான் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பைலட்டுகள் ராஜினாமாவால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக வரும் செய்திகள் தவறானவை என்று கூறப்பட்டுள்ளது.
இது தான் எங்களுக்கு வேலையா-மல்லையா?:
அதே போல டிவிட்டரில் விஜய் மல்லையா எழுதியுள்ள குறிப்பில், அரசு ஏராளமான வரியைப் போட்டு திணறடித்துக் கொண்டிருக்கும் போது, நஷ்டம் ஏற்படுத்தும் ரூட்களில் விமானங்களை இயக்க வேண்டியது கிங்பிஷருக்கு வேலையா? அல்லது நிறுவனத்தை லாபத்துடன் இயக்க வேண்டியது எங்கள் கடமையா? என்று கேட்டுள்ளார்.