மலேசியாவுக்கு ஹெராயின் கடத்தல்- ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர் உள்பட 6 பேர் கைது
சென்னை: சென்னையிலிருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் ரூ. ஆறரை கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை கடத்த முயன்ற ஒரு பெண் உள்ளிட்ட 5 பேரையும், அவர்களுக்கு உதவிய ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியரையும் வருவாய் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து மற்றும் சரக்கு வாகனத்தையும் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். சென்னை விமான நிலைய வரலாற்றில், போதைப் பொருள் கடத்தலுக்காக விமான நிறுவனம் ஒன்றின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவுக்கு விமானம் மூலம் போதைப் பொருட்களைக் கடத்த முயற்சி நடப்பதாக வருவாய் புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று நள்ளிரவு 1 மணியளவில் கோலாலம்பூருக்குப் புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்யவிருந்த பயணிகளை வருவாய் புலனாய்வுப் பிரிவினர் ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது சத்தியா என்ற பெண்ணும், முகம்மது மசூர், அப்துல் காதிர் ஆகியோர் விமான நிலையம் வந்தனர். உரிய பரிசோதனைகளை முடித்த பின்னர் அவர்கள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பேருந்தில் ஏறி அமர்ந்தனர். பேருந்து விமானத்தின் அருகே சென்று நின்றது. இதையடுத்து இறங்கிய இந்த மூவரிடமும், பேருந்தின் ஓட்டுனரான சென்னை வண்டலூரைச் சேர்ந்த பாலகுமார் என்பவர் ஒரு பார்சலைக் கொடுத்தார்.
இதையடுத்து அவர்கள் நான்கு பேரையும் வருவாய் புலனாய்வுப் பிரிவினர் வளைத்துப் பிடித்தனர். அந்த பார்சலை வாங்கிப் பார்த்தபோது அதில் ஹெராயின் இருந்தது தெரிய வந்தது. அதன் எடை 3 கிலோவாகும். அதன் சர்வதேச மதிப்பு ரூ. ஆறரை கோடியாகும்.
அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் ஜாகிர் உசேன் உள்ளிட்ட மேலும் 2 பேர் சிக்கினர்.
பின்னர் அந்த பேருந்தையும், சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர் அதிகாரிகள். இவர்களுக்கு வேறு யாருடன் தொடர்பு உள்ளது என்பது குறித்து வருவாய் புலனாய்வுப் பிரிவினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications