தலிபான் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் பிடிபட்டார்
கோஸ்ட்: தலிபான் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளரான ஜபியுல்லா முஜாகித் பிடிபட்டுள்ளார்.
அவரை ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்கக் கூட்டுப் படையினர் பிடித்துள்ளனர்.
பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள பத்கிகா மாகாணத்தின் சர் ஹவ்ஸா மாவட்டத்தில் கூட்டுப் படையினர் நடத்திய சோதனையில் இவர் பிடிபட்டார்.
தலிபான் இயக்கத்தின் இரு அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களில் முஜாகிதும் ஒருவர் ஆவார். கிழக்கு மற்றும் வடக்கு ஆப்கானிஸ்தான் பகுதிகளுக்கான தலிபான் செய்தித் தொடர்பாளராக இவர் இருந்தார்.
விரைவில் ஆப்கானிஸ்தானில் பல்வேறு பழங்குடித் தலைவர்களின் மாநாட்டை (loya jirga) கூட்டவுள்ளார் அந் நாட்டு அதிபர் ஹமீத் கர்சாய். இந்த மாநாட்டுக்கு வருவோருக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்கக் கூட்டுப் படையினர் உருவாக்கிய ரகசிய திட்டம் தலிபான்கள் கையில் சிக்கியது.
இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அடங்கிய ரகசிய திட்ட அறிக்கையை ஜபியுல்லா முஜாகித் மூலமாக தலிபான்கள் வெளியில் கசிய விட்டனர். மேலும் தங்களது இணையத்தளத்திலும் அப்லோட் செய்தனர்.
இதன்மூலம் பழங்குடித் தலைவர்களின் மாநாடு பாதுகாப்பாக நடக்குமா என்பதே சந்தேகத்துக்கிடமாகியுள்ளது. இதனால் இதில் பங்கேற்க பல பழங்குடித் தலைவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதையடுத்து நடந்த தேடுதல் வேட்டையில் தான் கூட்டுப் படையினரிடம் ஜபியுல்லா சிக்கியுள்ளார்.