அணு மின் நிலையம் பாதுகாப்பு தொடர்பாக பிரதமரை அணுகவும்-சுப்ரீம் கோர்ட்
பொது நல நோக்கத்திற்கான என்ஜிஓ அமைப்புகள் மற்றும் பொது நலன் மனு அமையம் ஆகியவை சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இதில் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் வாதிடுகையில்,
இந்தியாவில் உள்ள அனைத்து அணு மின் நிலையங்களின் பாதுகாப்பு குறித்த தெளிவான நிலை ஏற்படும் வரை அவற்றை மூட வேண்டும். இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த்தையும் நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா மற்றும் நீதிபதி ஸ்வதேந்தர் குமார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், இதுதொடர்பாக மனுதாரர்கள் பிரதமரைத்தான் அணுக வேண்டும். அல்லது அணு சக்தித் துறையை அணுகி விளக்கம் கேட்க வேண்டும்.
அதேசமயம், ஏதாவது ஒரு தனிப்பட்ட அணு மின் நிலையம் குறித்த கவலை மனுதாரர்களுக்கு இருந்தால் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம்.
மாறாக, நாடு முழுவதும் உள்ள அணு மின் நிலையங்கள் குறித்த விவகாரம் என்றால் பிரதமர் அல்லது அணு சக்தி துறையை அணுகி நிவாரணம் பெறலாம் என்று அறிவுறுத்தினர்.
பின்னர் இந்த வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டது.