சென்னையி்ல் சட்டவிரோத பைக் ரேஸில் சிக்கி தந்தை, குழந்தை காயம்-மக்கள் கொந்தளிப்பு
சென்னை: சென்னையில் பைக்கில் சென்ற தந்தை மற்றும் அவரது குழந்தை மீது, சட்டவிரோதமாக பைக் ரேஸ் நடத்தியவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக இருவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை.
சென்னை மைலாப்பூரை அடுத்த குயில் தோட்டத்தைச் சேர்ந்தவர் ஜோசப் அலெக்சாண்டர். அவரது மனைவி மற்றும் 3 வயது குழந்தையுடன் பைக்கில் பெசன்ட் நகர் நோக்கி சென்று கொண்டிருந்தார். சாந்தோம் புற்று தெரு சந்திப்பு வழியாக சென்ற போது, எதிரே வேகமாக வந்த பைக் மோதியது. இதில் ஜோசப் அலெக்சாண்டர் பைக்கில் முன்னாள் அமர்ந்திருந்த 3 வயது குழந்தையின் கையிலும், ஜோசப் அலெக்சாண்டருக்கு முகத்திலும் காயம் ஏற்பட்டது.
விபத்தை ஏற்படுத்திய பைக்கை ஓட்டி வந்தவர் மைலாப்பூர், காரணீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்த நெல்சன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நெல்சனையும், அவருடன் பின்னால் இருந்தவரையும் மடக்கிப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பைக்கையும் தூக்கிப் போட்டு நொறுக்கினர். இதில் நெல்சன் படுகாயமடைந்தார். அவருடன் வந்தவர் ஓடி விட்டார்.
ஆத்திரம் குறையாத பொதுமக்கள் பைக்கை தாறுமாறாக கீழே தூக்கிப் போட்டு சேதப்படுத்தினர். தகவல் அறிந்த அடையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பொதுமக்களிடம் இருந்து நெல்சனை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல சாந்தோம் அருகே நடந்த பைக்ரேசில் வடசென்னை சேர்ந்த ஜவகர் என்பவரும் விபத்தில் சிக்கினார். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது,
ஞாயிற்றுக் கிழமைகளில் நெரிசல் மிகுந்த காமராஜ் சாலையில் வாலிபர்கள் பைக் ரேஸ் நடத்துகின்றனர். இதில் எதிரே வரும் பலர் மீதும் மோதுவதும், சிக்னல்களை மதிக்காமல் விபத்து ஏற்படுவதும் சகஜமாகி வருகிறது. போலீஸார் தடை விதித்தும் கூட இவர்களின் அட்டகாசம் தொடர்கிறது. இவர்களுக்கு போலீஸார் கடுமையான முடிவு கட்ட வேண்டும் என்றனர்.