ராஜஸ்தான்: 6 அமைச்சர்களுக்கு கல்தா-ஜனாதிபதியை விமர்சித்தவருக்கு 'எக்ஸ்ட்ரா பவர்'
ஜெய்பூர்: சர்ச்சைகளால் கதிகலங்கிப் போய் இருக்கும் ராஜஸ்தான் அரசின் அமைச்சர்கள் நேற்று கூண்டோடு ராஜினாமா செய்தனர். இன்று அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
சர்ச்சை மேல் சர்ச்சையில் சிக்கித் தவிக்கும் ராஜஸ்தான் அரசின் அமைச்சர்கள் அனைவரும் நேற்று கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதையடுத்து அம்மாநில முதல்வர் அசோக் கெலோட் அமைச்சரவையை மாற்றியமைத்துள்ளார். இதில் சட்டவிரோத சுரங்கத் தொழில் செய்து வருவதாக குற்றம்சாட்டப்பட்ட கல்வி அமைச்சர் பரோசிலால் ஜாதவ் உள்பட 6 அமைச்சர்களுக்கு இடமில்லை.
காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் நெருக்கமாக இருந்ததால் தான் பிரதீபா பாட்டீலுக்கு குடியரசுத் தலைவர் பதவி கிடைத்தது என்று விமர்சித்த பஞ்சாயத்து ராஜ் மற்றும் வக்பு வாரிய விவகாரத்துறை அமைச்சர் அமின் கானுக்கு மீண்டும் அதே துறை வழங்கப்பட்டுள்ளதுடன், சுதந்திரமாக செயல்படும் அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததால் தனது பதவியை ராஜினாமா செய்தார் அமைச்சர் ராம்லால் ஜாட். முத்லவர் கெலோட் அவரது ராஜினாமாவை ஏற்று்க கொண்டுள்ளார். அமைச்சர் பரோசிலாலைப் பற்றி விமர்சித்த அமைச்சர் பன்வார்லால் மேகாவாலுக்கு புது அமைச்சரவையில் இடமில்லை. அமைச்சர்கள் கோல்மா தேவி, பிரமோத் ஜெயின் பையா ஆகியோரின் பெயர்களும் புதிய அமைச்சரவைப் பட்டியலில் இடம்பெறவில்லை.
புதிய அமைச்சர்கள் இன்று மதியம் பதவியேற்றுக் கொள்கின்றனர்.
காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சருடன் தொடர்பு வைத்திருந்த நர்ஸ் பன்வாரி தேவி மாயமானதை எதிர்கட்சிகள் ஊதிப் பெரிதாக்குவதால் காங்கிரஸ் கவலை அடைந்துள்ளது. பன்வாரி தலித் என்பதால் தான் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்துகிறார்கள் என்பது காங்கிரஸின் எண்ணம்.