மீரா குமாருக்கு பாஜக நோட்டீஸ்-அமளி துமளி 'நியூசுக்கு' தயாராகுங்கள்!
டெல்லி: வரும் 22ம் தேதி கூடவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, கருப்புப் பண விவகாரம், தனி தெலங்கானா மாநில கோரிக்கை ஆகியவை குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் மீரா குமாருக்கு பாஜக நோட்டீஸ் தந்துள்ளது.
இது குறித்து மக்களவை பாஜக எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் தளத்தில் எழுதியிருப்பதாவது:
குளிர்காலக் கூட்டத்தொடரில் மக்களை வாட்டி வரும் விலைவாசி உயர்வு, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வருவது, தனித் தெலங்கானா கோரி நடந்து வரும் போராட்டம் ஆகியவை குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்.
மேலும் ஊழல், மணிப்பூர் நிலவரம், வெள்ளம், வேகமாய் பரவி வரும் மூளைக் காய்ச்சல், இந்திய-பாகிஸ்தான் உறவு, காஷ்மீர் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்தும் எங்கள் கட்சியின் எம்பிக்கள் நோட்டீஸ் அனுப்புவார்கள்.
கறுப்புப் பணத்துக்கு எதிராக எங்கள் தலைவர் எல்.கே. அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டுள்ள நிலையில், அது குறித்து முக்கியமாக நாடாளுமன்றத்தில் விவாதிப்போம்.
காஷ்மீரின் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை விலக்கி கொள்வது தொடர்பான அந்த மாநில அரசின் கோரிக்கை, 2ஜி அலைக்கற்றை விவகாரம் பற்றியும் விரிவாக விவாதிப்போம்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீரில் ஃபுளோரைடு இருப்பது குறித்து கவன ஈர்ப்பு மசோதாவை நான் கொண்டு வரவுள்ளேன் என்று கூறியுள்ளார் சுஷ்மா ஸ்வராஜ்.
இத்தனை பிரச்சனைகளை பாஜக கிளப்பவுள்ள நிலையில், முக்கியமாக விலைவாசி உயர்வு பிரச்சனையை வைத்து காங்கிரஸ் அரசை மடக்க இடதுசாரிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் தினமும் அமளி-துமளி, நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு என்ற செய்திகளை நீங்கள் வரும் 22ம் தேதி முதல் பார்க்கப் போவது நிச்சயம்.
சபாநாயகர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்:
இந் நிலையில் குளிர்கால கூட்டத் தொடரை அமைதியாக நடத்துவது குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் மீரா குமார் இன்று ஆலோசனை நடத்தினார்.
டிசம்பர் 21ம் தேதிவரை நடைபெறும் இக் கூட்டதில் 54 மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. கூட்டத்தை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க இன்று மீராகுமார் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, பவன்குமார், பாஜக சார்பில் சுஷ்மா ஸ்வராஜ், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, அதிமுக சார்பில் தம்பிதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.