மாநிலங்களை பிரித்து புதிய மாநிலங்களை உருவாக்க வேண்டும்-ராமதாஸ்
சென்னை: உத்தரப் பிரதேச மாநிலத்தை 4 ஆகப் பிரிக்க வேண்டும் என்ற அம்மாநில முதல்வர் மாயாவதியின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்களின் உணர்வுகளை மதித்து அந்த மாநிலத்தைப் பிரித்து 4 புதிய மாநிலங்கள் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் மாயாவதி அறிவித்துள்ளார்.
இதற்கான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பின்னர், புதிய மாநிலங்கள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆந்திர மாநிலத்தில் தெலுங்கானா, கர்நாடகத்தில் கூர்க், பீகாரில் மிதிலாஞ்சல், குஜராத்தில் செளராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் கூர்காலாந்து, அஸ்ஸாமில் கூச்பிகார் என 20க்கும் மேற்பட்ட புதிய மாநில கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன.
சிறிய மாநிலங்களை உருவாக்குவதன் மூலம் அப்பகுதியின் வளர்ச்சிக்கு வழிகோலுவதுடன் நாட்டின் வளர்ச்சியையும் பெருக்க முடியும் என்பதை உணர்ந்து புதிய மாநிலங்களை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
கூடங்குளம் அணு உலை வேண்டவே வேண்டாம்:
முன்னதாக நேற்று நிருபர்களிடம் பேசிய அவர், கூடங்குளத்தில் அணு உலை வேண்டாம் என்று 1989ம் ஆண்டு போராட்டம் நடத்தினேன். கல்பாக்கம் அணு உலைக்கு எதிராகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளேன். கூடங்குளம் அணு உலை வேண்டவே வேண்டாம்.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் அன்னிய சக்திகள் இருப்பதாக கூறுவது அந்த மக்களை கொச்சைப்படுத்தும் செயல், திசை திருப்பும் வேலை. அன்னிய சதி என்று வதந்தி பரப்புவோரை வன்மையாக கண்டிக்கிறேன்.
கல்பாக்கம் அணு உலையின் தாக்கத்தால் தைராய்டு புற்று நோய், குறை பிரசாவம் உள்பட பல்வேறு நோய்கள் அப்பகுதி மக்களை தாக்கியுள்ளன என்றார்.
பாமகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ வேல்முருகன், வன்னியர் சங்கத்தின் மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.100 கோடி எங்கே என்று கேள்வி எழுப்பியுள்ளாரே, என்று நிருபர்கள் கேட்டதற்கு, இப்போது அந்த கேள்வி எதற்கு என்றார் ராமதாஸ்.