கூடங்குளத்தில் நடுக்கடலில் ஆர்ப்பாட்டம் நடத்த மீனவர்கள் அழைப்பு- போலீஸ் குவிப்பு
கூடங்குளம்: உலக மீனவர் தினத்தை ஒட்டி கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் நடுக்கடலில் ஆர்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் இடிந்தகரை, கூடங்குளம் அணு மின்நிலையப் பகுதிகளில், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கூடங்குளம் அணுமின்நிலையம் செயல்படத் தொடங்கினால் தங்களில் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பது கூடங்குளம் சுற்றுவட்டாரங்களில் உள்ள மீனவர்களின் அச்சம். எனவே அணுமின்நிலையத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது அவர்களின் வலியுறுத்தல்.
முதல் அணு உலை டிசம்பர் மாத இறுதியில் செயல்படும் என்று கூறப்பட்டதை அடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மூன்றுமாதகாலமாக மீனவர்களும், சமூக ஆர்வலர்களும் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இடிந்தகரை கிராமத்தில் இரண்டாம் கட்டமாக போராட்டக்குழுவினர் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் 35 நாட்களாக நீடிக்கின்றது. இந்த நிலையில் உலக மீனவர் தினமான இன்று ஆயிரக்கணக்கான மீனவர்கள் நடுக்கடலில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். 100 க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு செல்லும் மீனவர்கள் தங்களுடைய படகுகளில், கறுப்புக் கொடியை ஏற்றியுள்ளனர்.
பாதுகாப்பு அதிகரிப்பு
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக நடுக்கடலில் ஆர்ப்பாட்டம் நடத்த போராட்ட குழுவினர் அழைப்பு விடுத்துள்ளதால், அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம், அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பு, இடிந்தகரை நுழைவாயில், ஆகிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆர்பாட்டத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆர்பாட்டத்திற்குப்பின்னர் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக போராட்டக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.