தென்காசி பகுதியில் காய்கறி விலை கிடுகிடு: மக்கள் கவலை
சுரண்டை, பாவூர்சத்திரம், விகேபுதூர், கழுநீர்குளம், வெள்ளங்கால், மேலப்பாவூர், கீழப்பாவூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் கார் மற்றும் பிசான சாகுபடி என 2 இரண்டு பருவ காலங்களில் விவசாய பணிகளை மேற்கொள்கின்றனர். கார் சாகுபடியின் போது நெல் பயிரிடுவதையும், அதன்பின் பிசான சாகுபடியின் போது உள்ளி, பல்லாரி, தக்காளி, கத்திரிக்காய், வெண்டை, மிளகாய் போன்ற காய்கறிகளை பயிரிடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தென்மேற்கு பருவமழையின் போது இப்பகுதி விவசாயிகள் நெல் பயிரிட்டிருந்தனர். அறுவடை நேரத்தின் போது தொடர்ச்சியாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வந்ததின் விளைவாக நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் நாற்றுகளாக முளைக்க தொடங்கிவிட்டதால் பல விவசாயிகள் பெரும் நஷ்மடைந்தனர். இந்நிலையில் தற்போது காய்கறி பயிரிட்டு அமோக விளைச்சல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தக்காளி கிலோ ரூ.40, வெங்காயம் ரூ.40, கத்தரிக்காய் ரூ.40, வெண்டை ரூ.30, பல்லாரி ரூ.30, மல்லி இலை கிலோ ரூ.120 என விற்கப்பட்டு வருவதால் அத்தியாவாசியப் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர்.
மேலும் பால் விலை, பஸ் கட்டண உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே அரசால் வழங்கப்படும் இலவச பொருட்களை நிறுத்திவிட்டு மக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வரியை குறைக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.