8 ஆதரவற்ற இந்திய குழந்தைகளுக்கு யு.எஸ். விசா மறுப்பு
டெல்லி: 8 ஆதரவற்ற இந்திய குழந்தைகளுக்கு அமெரிக்கா விசா கொடுக்க மறுத்துள்ளது.
8 முதல் 10 வயதுள்ள 8 ஆதரவற்ற குழந்தைகள் அமெரிக்காவில் நடக்கும் வேர்ல்டு கொயர் நிகழ்ச்சியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு பாடவிருந்தனர். இதற்காக அவர்கள் கடந்த 8 மாதங்களாக கடும் பயிற்சி மேற்கொண்டனர். அமெரிக்காவுக்கு புறப்பட இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அவர்களுக்கு விசா கொடுக்க அமெரிக்க தூதரகம் மறுத்துள்ளது.
இதனால் அந்தக் குழந்தைகள் பெரும் ஏமாற்றமும், வருத்தமும் அடைந்துள்ளனர்.
நாங்கள் ஆதரவற்றவர்கள். அதனால் நாங்கள் எல்லாம் கனவு காணவே கூடாது என்று ஒரு குழந்தையும், நாங்கள் கடந்த 8 மாதங்களாக மேற்கொண்ட பயிற்சி எல்லாம் வீணாகப்போகப் போகிறது என்று இன்னொரு குழந்தையும் வருத்தம் தெரிவித்தார்கள்.
இது குறித்து சர்வதேச குழந்தைகள் பிணையத்தின் உறுப்பினரான ஹீதர் பீடர்சன் கூறியதாவது,
நான் கடும் அதிருப்தியடைந்துள்ளேன். அந்த குழந்தைகளுக்கு விசா கிடைக்க சிறிது முயற்சி எடுக்க வேண்டும் என்று தெரியும். ஆனால் விசா மறுக்கப்படும் என்று நினைக்கவேயில்லை. இந்த குழந்தைகளுக்கு பல அமெரிக்க செனேட்டர்கள் மற்றும் மாநில ஆளுநர்கள் வரவேற்பு கடிதங்கள் அனுப்பியுள்ளனர். அப்படியிருந்தும் விசா மறுக்கப்பட்டிருக்கிறது என்றார்.
நாங்கள் அமெரிக்காவுக்கு இந்திய பிரதிநிதிகளை அனுப்புவது இது ஒன்றும் முதன் முறையன்று. ஏற்கனவே 3 முறை பிரதிநிதிகளை அனுப்பியுள்ளோம் என்று உதயன் கேர் தலைவர் ரீனா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications