கேரளாவின் பாதுகாப்புக்கு முல்லைப்பெரியாறில் புதிய அணை அவசியம் –உம்மன் சாண்டி

மூன்று நாள் பயணமாக டெல்லி சென்று திரும்பிய பின் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முல்லைப் பெரியாறில் கடந்த ஜூன் மாதம் முதல் 20 சிறிய அளவிலான நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட அணைப்பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதனால் அணையில் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக கூறிய அவர், புதிய அணை கட்டப்பட வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார்.
இது குறித்து டெல்லியில் அனைத்து மட்டங்களிலும் தெளிவுபடுத்தியிருப்பதாக கூறிய அவர், கேரளாவில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். புதிய அணை கட்டப்படுவதன் மூலம் தமிழகத்திற்கு தண்ணீரும், கேரளாவிற்கு பாதுகாப்பும் கிடைக்கும். தமிழகத்திற்கு எப்பாடு பட்டாவது நாங்கள் தண்ணீர் தருவோம். அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் உம்மன் சாண்டி தெரிவித்தார்.
டேம் 999 படத்தை தடை செய்ய மாட்டோம்
டேம் 999 படத்தைத் தடை செய்ய கேரள அரசு திட்டமிட்டுள்ளதா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அப்படி எந்தத் திட்டமும் எங்களிடம் இல்லை. அது ஒரு சினிமாப் படம். அதை தடுக்க மாட்டோம். பிரச்சினை அதுவல்ல, அணைதான் என்றார் சாண்டி.
1886 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கேரளா மாநில திருவிதாங்கூர் மகாராஜா மன்னருடன் போடப்பட்ட ஒப்பந்தப்படி கேரளா மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்டது. தற்போது அணையில் 136 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. விவசாயத் தேவைக்காகவும், குடிநீர் தேவைக்காகவும் 142 அடிவரை தண்ணீர் தேக்கி வைக்க தமிழ்நாடு முடிவு செய்துள்ளது. இதற்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அணை பழுதடைந்து விட்டதாக கூறி அணை நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது கேரளா அரசு. இதற்கான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் பழைய அணையை உடைத்து விட்டு முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்ட கேரளா முயற்சி மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில் முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள 'டேம் 999" என்ற ஆங்கிலத் திரைப்படம் இந்த வாரம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பேச்சுவார்த்தை அழைக்கும் பி.ஜே.ஜோசப்
இதற்கிடையே, முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பேசி சுமூகத் தீர்வு காண முன்வருமாறு கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் அழைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
இடுக்கி மாவட்டத்தில் நிகழ்ந்து வரும் தொடர் நில அதிர்வுகளால் முல்லை பெரியாறு அணைக்கு ஏற்பட்டுள்ள பலவீனமான நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும்.
புதிய அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு தற்போது வழங்கப்பட்டு வரும் நீரின் அளவு எக்கராணம் கொண்டும் குறைக்கப்படாது என எந்த ஒரு அமைப்பின் முன்பாகவும், எத்தகையதொரு வடிவிலும் உறுதிமொழி அளிக்க கேரளா தயாராக இருக்கிறது. இதுகுறித்து தமிழகம் எவ்வித பயமும் கொள்ளத் தேவையில்லை.
கடந்தாண்டு ஜூலை முதல் தற்போது வரை 20 நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. அணையை ஆய்வு செய்த ரூர்கி ஐ.ஐ.டி., வல்லுநர்கள், ரிக்டர் அளவுகோலில் 6.5 என்ற அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டால், அணை முழுவதும் உடைந்து விடும் என்றும், அப்படி ஒரு சூழ்நிலையில், மக்களை காப்பாற்றுவது என்பது இயலாத காரியமாகி விடும் என்றும் கூறியுள்ளனர். எனவே பெரியாறு அணையின் கீழ் வசிக்கும் 30 லட்சம் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு இவ்விஷயத்தில் தமிழகம் முடிவெடுக்க வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications