அமெரிக்காவுக்கான புதிய பாக். தூதராக முன்னாள் அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் நியமனம்
இஸ்லாமாபாத்: அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதராக முன்னாள் அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதராக இருந்த ஹுசைன் ஹக்கானி தனது பதவியை ராஜினாமா செய்தார். பாகிஸ்தான் அதிபர் சர்தாரி அமெரிக்க ராணுவ உயர் அதிகாரியிடம் உதவி கோரி எழுதிய கடிதம் வெளியானதையடுத்து தான் ஹக்கானி ராஜினாமா செய்தார். இதையடு்தது தற்போது புதிய தூதராக முன்னாள் அமைச்சரும், முன்னாள் பத்திரிக்கையாளருமான ஷெர்ரி ரஹ்மான் (எ) ஷெஹர்பானு ரஹ்மான்(50) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஷெர்ரி சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் உரிமைக்காக குரல் கொடுத்து வருபவர். அவர் 2002 மற்றும் 2007ம் ஆண்டு பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மறைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவிற்கும், அதிபர் சர்தாரிக்கும் நெருக்கமானவர்.
மத்திய செய்தித் துறை அமைச்சராக இருந்த ஷெர்ரி சர்தாரியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2009ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஷெர்ரி ஜின்னா இன்ஸ்டிடியூட் என்னும் என்.ஜி.ஓ.வை நடத்தி வருகிறார். 20 ஆண்டு காலமாக பத்திரிக்கையாளராக இருந்துள்ளார். பாகிஸ்தானின் முன்னனி பத்திரிக்கையான தி ஹெரால்டில் 10 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
ஷெர்ரி ரஹ்மானுக்கு ஹுசைன் ஹக்கானி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான், அமெரிக்காவுக்கு இடையேயான உறவில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் தூதராக நியமிக்கப்பட்டுள்ள ஷெர்ரி மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.