அன்னிய நேரடி முதலீடு விவகாரம்- அனைத்துக்கட்சி கூட்டத்தில் சுமூக முடிவு ஏற்படவில்லை
டெல்லி: சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக விளக்கமளிக்க நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜி தலைமையில் கூடிய அனைத்து கட்சி கூட்டம் எந்த முடிவும் ஏற்படாமல் முடிந்தது.
சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டிற்கு 51 சதவிகிதம் அனுமதி அளித்து ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் மத்திய அமைச்சரவை கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு பாரதீயஜனதா உள்ளிட்ட எதிர்கட்சிகளும், கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. மூன்று நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியுள்ளன.
இதனிடையே நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்க வேண்டியதின் அவசியம் குறித்து விளக்கம் அளிக்க இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்திருந்தார்.
முடிவு எட்டப்படவில்லை
நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் எல்.கே. அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், திமுக சார்பில் திருச்சி சிவா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சில்லறை வணிகத்தில் வால்மார்ட் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதித்தால் அபாயம் ஏற்படும் என்றும் நேரடி அன்னிய முதலீட்டிற்கு அனுமதிக்கூடாது என்று எதிர்கட்சியினர் வலியுறுத்தினர். திரினாமுல் காங்கிரஸ் கட்சியினரும் அன்னிய நேரடி முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் இந்த முடிவில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்தது. இதனால் எந்தவித முடிவும் எட்டப்படாமல் அனைத்துக்கட்சி கூட்டம் முடிவடைந்தது.