ரூ 22 ஆயிரத்தையும் தாண்டியது தங்கத்தின் விலை... வாங்கப் போனவர்கள் பெருங்கவலை!!
டாலர் மதிப்பு உயர்வு, பங்குச் சந்தைகளின் நிலையற்ற தன்மை, அதிகமாக தங்கத்தை ஏற்றுமதி செய்யும் ஐரோப்பிய நாடுகளின் நெருக்கடி போன்றவற்றால் இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.
புதன்கிழமை காலை ஒரு கிராம் தங்கம் ரூ.2728-க்கும், ஒரு பவுன் ரூ.21,824-க்கும் விற்பனையானது. இன்று தங்கத்தின் விலை மேலும் அதிகரித்து வரலாறு காணாத வகையில் பவுன் ரூ.22 ஆயிரத்தை தாண்டியது.
இன்று பவுனுக்கு ஒரே நாளில் ரூ.280 அதிகரித்து ரூ.22,104 ஆக உயர்ந்தது. ஒரு கிராம் ரூ.2,763 ஆக விற்கப்பட்டது. கடந்த 25-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.2683-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.21,464-க்கும் விற்கப்பட்டது. 5 நாளில் ரூ.780 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வருடங்களாகவே தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் தங்கம் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏழைகளுக்கு அரிதான பொருளாக மாறிவிட்டது. இதனால் பெண்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இன்று தங்கம் வாங்கச் சென்ற பலரும் கவலையுடன், நகைக்கடைகளை சபித்தபடி வெளியேறியதைப் பார்க்க முடிந்தது.
விலையை உயர்த்தும்போது மட்டும் ரூ.700 முதல் 1000 வரை உயர்த்துகிறார்கள், குறையும்போது ரூ.20- 30 என குறைக்கிறார்கள் என்று நகை வாங்க வந்த பெண்கள் குமுறலுடன் தெரிவித்தனர்.