புதிய தலைமை செயலகம்: விசாரணை கமிஷன் தலைவராக நீதிபதி ரகுபதி நியமனம்
சென்னை: திமுக ஆட்சியில் கட்டப்பட்ட தலைமைச் செயலக கட்டுமானம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனின் புதிய தலைவராக நீதிபதி ரகுபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை திமுக அரசு கட்டியது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், இதைக் கட்டுவதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் கூறி, அது குறித்து விசாரிக்க நீதிபதி தங்கராஜ் தலைமையில் விசாரணை கமிஷனை அமைத்தது.
தங்கராஜ் நியமனத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து அவர் பதவி விலகினார்.
இந் நிலையில், இந்த விசாரணைக் கமிஷனின் புதிய தலைவராக முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதியை தமிழக அரசு நியமித்துள்ளது.
மின்சார ஒழுங்குமுறை ஆணையம்-புதிய தலைவரை தேர்வு செய்ய குழு அமைப்பு:
அதே போல தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்ய மூன்று பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
இந்த ஆணையத்தின் தலைவராக உள்ள எஸ். கபிலனின் பதவிக் காலம் வரும் ஜனவரி 2ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து புதிய தலைவரைத் தேர்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கே.சம்பத் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை, தமிழக அரசு அமைத்துள்ளது.
இந்தக் குழு மூலம் தேர்வு செய்யப்படும் புதிய தலைவர், பதவியேற்ற நாளிலிருந்து 5 ஆண்டுகள் அல்லது 65 வயதைப் பூர்த்தி செய்யும்வரை, இதில் எது முன்னதாக வருகிறதோ அதுவரை அந்தப் பதவியில் இருப்பார்.