நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆந்திர அரசு வெற்றி-16 ஜெகன் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்த்து ஓட்டு
ஹைதராபாத்: ஆந்திர சட்டதபையில் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் காங்கிரஸ் அரசு வெற்றி பெற்றது.
மொத்தம் 294 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட ஆந்திர சட்டசபையில் 7 இடங்கள் காலியாக உள்ளன. இதனால் தற்போது மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 287 ஆகும். இதில் 160 எம்எல்ஏக்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர். 122 எம்எல்ஏக்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். 4 எம்எல்ஏக்கள் அவைக்கு வரவில்லை. ஒரு உறுப்பினர் வாக்களிக்கவில்லை.
முன்னதாக நேற்று காலை 10 மணி முதல் சுமார் 17 மணி நேரம் இந்தத் தீர்மானத்தின் மீது சட்டசபையில் கடும் விவாதம் நடந்தது.
தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஆகியோர் தனிப்பட்ட முறையில் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசிக் கொண்டனர்.
சோனியாவின் காலில் விழுந்ததால் கிடைத்த முதல்வர் பதவி இது, ஜாக்பாட் லாட்டரி மாதிரி தான் இந்தப் பதவிக்கு நீங்கள் வந்தீர்கள் என்று முதல்வரைப் பார்த்து நாயுடு தாக்க, சொந்த மாமனாருக்கே மோசம் செய்த மனிதர் நீங்கள், அந்தக் குடும்பத்துக்கே துரோகம் செய்தவர் நீங்கள் என்று பதிலுக்கு நாயுடுவை முதல்வர் ரெட்டி தாக்கினார்.
இறுதியில் நள்ளிரவு 1.15 மணியளவில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தது.
அப்போது ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு 16 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி உத்தரவை மீறி நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனாலும் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் 17 எம்எல்ஏக்களின் ஆதரவால் காங்கிரஸ் அரசு தப்பியது.
பிரஜா ராஜ்ஜியம் கட்சி காங்கிரஸை ஆதரித்தாலும் அமைச்சர் பதவி தராததால் பல எம்எல்ஏக்களும் அதிருப்தியில் உள்ளனர். அந்தக் கட்சிக்கு அமைச்சர் பதவி தரப்படும் என காங்கிரஸ் உறுதியளித்ததால், நேற்று அவர்கள் அரசைக் காப்பாற்றியுள்ளனர்.
இந் நிலையில் கட்சிக்கு எதிராக வாக்களித்த 16 ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவாளர்கள் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிகிறது. அவர்களது பதவிகளைப் பறிக்க சபாநாயகரால் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.