குமுளியில் தமிழர்களின் கடைகள் உடைப்பு- தொழிலாளர்களை சிறைப்பிடித்து கேரளத்தினர் அக்கிரமம்

Subscribe to Oneindia Tamil

தேனி: குமுளியில் தமிழர்கள் நடத்தி வரும் கடைகளைத் தாக்கி கேரளத்தினர் சூறையாடியுள்ளனர். மேலும் தமிழக தொழிலாளர்கள் 500 பேரை சிறைப்பிடித்து ரவுடித்தனம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸாரின் நடவடிக்கையைத் தொடர்ந்து தமிழக தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

தமிழர்களுக்கு எதிரான கலவரமாக முல்லைப் பெரியாறு பிரச்சினையை கேரளத்தினர் மாற்றி வருகின்றனர்.இடுக்கி மாவட்டம் குமுளியில் இந்த அக்கிரமச் செயல் தலைவிரித்தாடி வருகிறது. இதைத் தடுக்கவோ, ஒடுக்கவோ கேரள காவல் துறையும் சரி, அரசும் சரி உறுதியான நடவடிக்கை எதையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகின்றன.

நேற்று முன்தினம் இரவு குமுளி எல்லையில் தமிழக லாரிகளை அந்த பகுதியை சேர்ந்த சில அமைப்பினர் அடித்து நொறுக்கியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதனை அடுத்து குமுளி மலை சாலையில் வாகனங்கள் போக்குவரத்து நள்ளிரவில் திடீர் என்று நிறுத்தப்பட்டன. குறிப்பாக தமிழக அய்யப்ப பக்தர்கள் வாகனங்கள் நீண்ட வரிசையில் குமுளியில் இருந்து லோயர்கேம்ப் வரை அணி வகுத்து நின்றன. நள்ளிரவு நேரத்தில் நிலவிய இந்த பதற்றமான சூழலையை தொடர்ந்து, குமுளி, போடிமெட்டு, கம்பம் மெட்டு மலைச்சாலையில் உள்ள வாகன சோதனைச்சாவடி அருகே தமிழக போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டனர்.

தேனி மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் பேச்சு வார்த்தையை அடுத்து எல்லை வழியாக மலைப் பாதையில் நின்ற வாகனங்கள் மட்டுமே நேற்று அதிகாலையில் குமுளிக்கு அனுப்பப்பட்டன. மேலும் தமிழக போலீஸார் கேரள போலீஸாரிடம் கண்டிப்புடன் பேசியதைத் தொடர்ந்து கேரள மாநில பகுதியில் அடித்து நொறுக்கப்பட்ட லாரிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டது.

இதனிடையே நேற்று முன்தினம் நள்ளிரவில் தமிழக லாரிகள் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் நேற்று அதிகாலையில் காட்டுத் தீ போன்று கூடலூர், லோயர்கேம்ப், கம்பம் பகுதியில் பரவியது.

இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலையில் தமிழக எல்லைப்பகுதியில் உள்ள குமுளி மலைப்பாதை பகுதிக்கு லோயர்கேம்ப், கூடலூர் பகுதி மக்கள் சென்றனர். அங்கு தேனி மற்றும் கம்பம் பகுதியில் இருந்து குமுளிக்கு பால் மற்றும் மளிகைப்பொருட்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் அனைத்தையும் தமிழக எல்லைப் பகுதியான குமுளியில் இருந்து தமிழ்நாட்டிற்கு திருப்பி அனுப்பினர்.

கேரள மாநிலத்திற்கு செல்லும் தமிழக வாகனங்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் தரும்வரை வாகனங்களை இயக்க கூடாது என்று பொதுமக்கள் கூறினார்கள். இதனை அடுத்து காய்கறி மற்றும் பால் வேன்கள் அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு திருப்பி விடப்பட்டன.

மேலும், கம்பம் நகரில் இருந்து கம்பம் மெட்டு சாலையில் பொதுமக்கள் காலை 11 மணியளவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கம்பம் நகரிலும் பதற்றமான சூழ்நிலை நிலவியது. நேற்று பிற்பகல் வரை இந்த மலை சாலை வழியாகவும் கேரள மாநிலத்திற்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்தும் எந்த ஒரு வாகனங்களும் வரவில்லை.

இந்தப் பின்னணியில் நேற்று அதிகாலையில் கம்பம் மெட்டு மலைப்பாதை வழியாக புளியன்மலை, கட்டப்பனை, பாரத்தோடு, அன்னியார் தொழு, நெடுங்கண்டனம் பகுதியில் உள்ள ஏலத்தோட்டங்களுக்கு ஜீப்களில் வேலைக்கு சென்ற கூலித்தொழிலாளர்கள் ஏறத்தாழ 500 பேர் கேரள பகுதியில் உள்ள சேத்துக்குளி என்ற இடத்தில் சிறைபிடிக்கப்பட்டனர்.

இதனால் தேனி மாவட்டத்தில் பரபரப்பு அதிகரித்தது. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் பழனிச்சாமி, உடனடியாக இடுக்கி மாவட்ட ஆட்சித் தலைவர் தேவதாசனை போனில் பிடித்து 500 பேரையும் பத்திரமாக அனுப்ப கேட்டுக் கொண்டார். அதன் பின்னர் போலீஸார் தலையிட்டு தமிழக தொழிலாளர்களை மீட்டு ஊர்களுக்கு திருப்பி அனுப்பினர்.

இந்த சூழ்நிலையில் நேற்று இரவு குமுளியில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை எதிரொலியாக கலவரம் வெடித்தது. இரவு 8 மணியளவில் குமுளியில் திரண்டிருந்த கேரள மக்களில் சிலர் திடீரென தமிழர்களின் கடைகளை அடித்து நொறுக்க ஆரம்பித்தனர். ஓட்டல்கள், டீக்கடைகள், பல்பொருள் அங்காடிகளை உருட்டுக் கட்டைகளால் அடித்து நொறுக்கினர். அப்போது கடைகளில் இருந்த தமிழர்களையும் அவர்கள் தாக்கி உள்ளனர்.

கும்பல் கும்பலாக வந்து கடைகளை கேரள மக்கள் தாக்க ஆரம்பித்ததும் கடைகளில் இருந்த தமிழர்கள் செய்வதறியாது திகைத்துப்போய் வெளியே ஓடி வந்தனர். அவர்களை போராட்டக்காரர்கள் துரத்தி துரத்தி அடித்தனர். 20-க்கும் மேற்பட்ட கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளன.

கம்பத்தில் பதிலடி

குமுளியில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் அவர்களது கடைகள் தாக்கப்பட்டதை அறிந்ததும் தேனி மாவட்டம் கம்பம் நகரில் நேற்று இரவு கேரளாவை சேர்ந்தவர்களின் கடைகள் மீது தமிழர்கள் தாக்குதல் நடத்தினர். இரவு 9 மணியளவில் கம்பம் நகரில் காந்திசிலை, மெயின்ரோடு, அரசமரம் சிக்னல் பகுதிகளில் ரோடுகளில் நின்றிருந்த நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு வந்து கேரளத்தினரின் ஓட்டல்கள், கடைகளை அடித்து நொறுக்கினார்கள்.

பிரபல பைனான்ஸ் நிறுவனம் ஒன்றும் அடித்து நொறுக்கப்பட்டது. ஏற்கனவே தமிழக-கேரள எல்லையில் பதற்றம் நிலவிவருவதால் கம்பம் நகரில் உள்ள கேரளத்தை சேர்ந்த கடை உரிமையாளர்கள் கடைகளை நேற்று முன்தினமே பூட்டிவிட்டு ஓடி விட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+