ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தல்-பெரும் சரிவுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்த புடின்
மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் விளாடிமீர் புடினின் ஐக்கிய ரஷ்ய கட்சிக்கு பெரும் சரிவுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
அதிபர் பதவியில் 2 முறை இருந்துவிட்டு பிரதமரான புடினின் கட்சிக்கு நேற்று முன் தினம் நடந்த தேர்தலில் 50 சதவீத வாக்குகளே கிடைத்தன. இத்தனைக்கும் வாக்குப் பதிவின்போது ஏராளமான முறைகேடுகளிலும் புடினின் கட்சியினர் ஈடுபட்டனர். அதையும் தாண்டி அந்தக் கட்சியின் ஆதரவு 17 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.
இதனால் 450 பேர் கொண்ட ரஷ்ய நாடாளுமன்றமான டுமாவில், அந்தக் கட்சி 238 இடங்களையே பிடித்துள்ளது. இது கடந்த தேர்தலில் வென்றதை விட 77 இடங்கள் குறைவாகும். ஆனாலும் அந்தக் கட்சியே மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
அதே நேரத்தில் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி 20 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இது கடந்த தேர்தலைவிட 8 சதவீதம் அதிகமாகும்.
சோவியத் யூனியன் உடைந்த பிறகு ரஷ்யாவின் மாபெரும் தலைவராக உருவெடுத்தவர் புடின். 2000ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை இரண்டு முறை அந்த நாட்டு அதிபராக இருந்த புடின், மூன்றாவது முறையாக மீண்டும் தொடர்ந்து அந்தப் பதவியில் இருக்க விதிகள் இடம் தராததால் தனது ஆதரவாளரான டிமிட்ரி மெத்வதேவை அதிபராக்கிவிட்டு, பிரதமரானார் புடின்.
இந் நிலையில் அடுத்த 3 மாதங்களில் நடக்கும் அதிபர் தேர்தலில் புடின் மீண்டும் போட்டியிடலாம் என்று கருதப்படும் நிலையில், நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சிக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.