சில்லறை வணிகத்தில் 51% நேரடி அன்னிய முதலீடு திட்டம் நிறுத்திவைப்பு- பிரணாப் முகர்ஜி
சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு 51 சதவிகிதம் அனுமதி அளிக்கும் காங்கிரஸ் அரசின் முடிவுக்கு பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கடந்த நவம்பர் 24 ம் தேதி முதல் நாடளுமன்றத்தின் இருஅவைகளும் முடங்கியுள்ளன. இந்த நிலையில் நாடளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து பேசி முடிவெடுக்க அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டியது.
மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் கூடிய கூட்டத்தில் இந்த கூட்டத்தில் பாஜக தலைவர்கள் சுஸ்மா சுவராஜ், சிபிஎம் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா, சிபிஐ தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா, உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். அனைத்துக்கட்சி கூட்டம் கூடியதும் பிரணாப் முகர்ஜி அறிக்கை ஒன்றை வாசித்தார்.
எதிர்கட்சிகள் சம்மதம்
எதிர்கட்சிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும் வரை சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவை ஒத்திவைக்க முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்தார். மத்திய அரசின் முடிவிற்கு பாரதீய ஜனதா, இடது சாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்தன. அரை மணிநேரம் மட்டும் நடைபெற்ற இந்த கூட்டத்திற்குப்பின்னர், நாடாளுமன்றத்தின் இருஅவைகளையும் சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தருவோம் என எதிர்கட்சிகள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து கடந்த பத்துநாட்களாக முடங்கியிருந்த நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூச்சல் குழப்பமின்றி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு கூடிய அனைத்து கட்சி கூட்டத்தின் போது எந்த முடிவும் எடுக்கப்படாமல் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.