கரூர் அருகே கொதிகலன் வெடித்து விபத்து - அதிமுக எம்.பி. தம்பித்துரை ஆறுதல்
கரூர்: கரூர் அருகே தனியார் சாயப்பட்டறையில் ஏற்பட்ட விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு கரூர் அதிமுக எம்.பி.தம்பிதுரை ஆறுதல் கூறினார்.
கரூர் அருகே உள்ள செல்லாண்டிபாளையத்தில் தனியார் சாயப்பட்டறை உள்ளது. இந்த சாயப்பட்டறையில் 50க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வந்தனர். இங்கு சாயம் ஏற்ற பயன்படும் கொதிகலன் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் கொதிகலன் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரை சுமார் 2 மீ்ட்டர் தூரம் தூக்கி எறியப்பட்டது. மேலும் கொதிகலன் அருகே பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளரின் உடல் 3 துண்டுகளாக சிதறியது. இன்னொரு தொழிலாளியின் கை துண்டிக்கப்பட்டு, தலை சிதறியது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது ஒருவரும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு பெண் ஒருவரும் என மொத்தம் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கரூர் அதிமுக எம்.பி. தம்பித்துரை, கரூர் மாவட்ட கலெக்டர் ஷோபனா, கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. காமராஜ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்பு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினர்.