தமிழகம் முழுவதும் மலையாளிகளின் கடைகளுக்குப் பலத்த பாதுகாப்பு-போலீஸ் குவிப்பு
சென்னை: தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சியினர் நேற்று தமிழகம் முழுவதும் மலையாளிகளின் கடைகளை தாக்கியதைத் தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் உள்ள மலையாளிகளின் நகைக் கடைகள், டீக் கடைகள், பேக்கரிகள் உள்ளிட்டவற்றுக்குப் போலீஸார் பாதுகாப்பு அளித்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழர்களும், தமிழர்களின் கடைகளும் கேரளாவில்தாக்கப்பட்டன. ஐயப்ப பக்தர்களும் தாக்கப்பட்டனர். இதையடுத்து தமிழகத்தில் மலையாளிகளுக்கு எதிராக தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சியினர் உள்ளிட்டோர் குதித்தனர். நேற்று ஆலுக்காஸ் நகைக் கடைகள், டீக்கடைகள், பேக்கரிகள் உள்ளிட்டவை தாக்கி நொறுக்கப்பட்டன. இதுதொடர்பாக பலர் கைது செய்யபப்ட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள மலையாளிகளின் நகைக் கடைகள் உள்ளிட்டவற்றுக்கு போலீஸார் பலத்த பாதுகாப்பு கொடுத்துள்ளனர். போலீஸார் அதிக அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மலையாளிகளின் கடைகளை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், கேரளாவில் தமிழர்களுக்கும், தமிழர்களின் கடைகள் உள்ளிட்டவற்றுக்கும் இன்னும் போதிய பாதுகாப்பு தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.