பரஞ்ஜோதி மீதான மோசடி வழக்கு - கருத்து தெரிவிக்க போலீஸ் கமிஷனர் மாசாணமுத்து மறுப்பு
திருச்சி: அதிமுக அரசில் 34 நாட்கள் அமைச்சராக இருந்த பரஞ்ஜோதி மீதான மோசடி வழக்கு குறித்து கருத்து தெரிவிக்க திருச்சி போலீஸ் கமிஷனர் மாசாணமுத்து மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதிமுக சட்ட அமைச்சராக இருந்த பரஞ்ஜோதி, தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி, தன்னிடம் நகை, பணம், சொத்துகளை பறித்துக் கொண்டு மோசடி செய்து விட்டதாக, பெண் டாக்டர் ராணி போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க கோரி பெண் டாக்டர் ராணி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். நீதிமன்றம் உத்தரவுப்படி திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் பரஞ்ஜோதி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இதனால் பரஞ்ஜோதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இது குறித்து திருச்சி மாநகர கமிஷனர் மாசாணமுத்துவிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது,
இந்த வழக்கு புலன்விசாரணையில் உள்ளது. எனவே, இது குறி்த்து கருத்து தெரிவிக்க இயலாது, என்றார்.
சாதாரண மக்கள் மீதான புகார் என்றால் உடனே வழக்கு பதிவு செய்வது என்றும், அதிமுக முக்கிய பிரமுகர்கள் மீதான புகார் என்றால் மவுனம் சாதிப்பதும் என்று தமிழக போலீசார் இரட்டை வேடம் போட்டு வருகின்றனர் என முணுமுணுத்தனர் கூடியிருந்தவர்கள்.