முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க கேரளாவை அனுமதிக்கக் கூடாது-திமுக வழக்கு
இதுகுறித்து இன்று மனு தாக்கல் செய்த பின்னர் திமுக வக்கீல் விடுதலை கூறுகையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று 2006ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அதை மீறும் வகையில் கேரள அரசு சட்டசபை மூலம் சட்டத் திருத்தம் கொண்டு வந்து உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஒன்றுமில்லாமல் செய்தது.
மேலும் முல்லைப் பெரியாறு அணையில் 136 அடி வரை மட்டுமே நீர் தேக்க வேண்டும் என்று அது அறிவித்தது. இந்த நிலையில் தற்போது திடீரென சட்டசபையைக் கூட்டி 120 அடியாக குறைக்க தீர்மானம் போட்டுள்ளது. இதை அமல்படுத்த அனுமதி கோரி உச்சநீதிமன்றத்திலும் மனு செய்துள்ளது.
இந்த மனுவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். 2006 உத்தரவை கேரளா அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்பதே திமுக இன்று தாக்கல் செய்துள்ள ஆட்சேபனை மனுவின் சாராம்சம்.
முதலில் 136 அடி, பின்னர் 120 அடி என கேரள அரசு தொடர்ந்து முரண்பாடாகவே நடந்து வருகிறது.
ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்,அணையின் பலம் உள்ளிட்டவை குறித்து ஆராய முன்னாள் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஐவர் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. அந்தக் குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு தனது இறுதி அறிக்கையை விரைவில் உச்சநீதிமன்றத்தில் வழங்கவுள்ளது.
இந்த நிலையில் எந்தவிதமான முகாந்திரமும் இல்லாமல், காரணமும் இல்லாமல், மக்களிடையே பீதியைக் கிளப்பும் வகையில் சட்டசபையைக் கூட்டி 120 அடியாக அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும் என்று கேரள அரசு தீர்மானம் போட்டுள்ளது. இதை ஏற்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்திடம் கேட்டுள்ளோம்.
இந்த மனுவை நாளை டி.கே.ஜெயின் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச், தமிழக அரசின் மனுவை விசாரணைக்கு எடுக்கும்போது எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளோம் என்றார்.