மன்மோகன் சிங் இன்று ரஷ்யா பயணம்- ஹரியானாவில் அணு ஆராய்ச்சி மையம் அமைக்க ஒப்பந்தம்
டெல்லி: 12வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மன்மோகன் சிங் 2 சுற்றுப்பயணமாக இன்று ரஷ்யா புறப்பட்டு செல்கிறார். இந்த சுற்றுப் பயணத்தின் போது இரு நாடுகளிடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.
ரஷியாவில் நாளை துவங்க உள்ள 12வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மன்மோகன் சிங் இன்று மாஸ்கோ புறப்பட்டு சென்றார். பிரதமர் உடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், பிரதமரின் முதன்மை செயலாளர் புலோக சாட்டர்ஜி, தொழில் அதிபர்கள் உட்பட பலர் ரஷ்யா சென்றுள்ளனர்.
இந்த 2 நாள் சுற்றுப்பயணத்தின் போது பிரதமர் மன்மோகன் சிங் நாளை (டிசம்பர் 16) ரஷ்யா ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடேவை சந்தித்து பேசுவார். மேலும் ரஷ்ய ஜனாதிபதி அளிக்கும் விருந்திலும் பிரதமர் கலந்து கொள்ள உள்ளார். பிரதமருடன் செல்லும் உயர்மட்ட குழுவினரும், தொழிலதிபர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளிடையேயான அணுசக்தி, பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதாரம், கலாச்சாரம் உள்ளிட்ட பல துறைகளில் மேம்படுத்துவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு, சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.
இது குறித்து வெளியுறவுத் துறை செயலாளர் ராஞ்சன் மத்தய் கூறியதாவது,
இரு நாட்டு உறவுகள் குறித்து ரஷ்ய, இந்திய தலைவர்கள் தனித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். அதன்பிறகு இரு நாட்டு நிறுவனங்களின் சிஇஓக்கள் கலந்து கொள்ளும் சந்திப்பும் நடைபெற உள்ளது. ரஷ்யா பிரதமர் விளாடிமிர் புடினை, இந்திய பிரதமர் சந்தித்து பேச உள்ளார்.
உள்துறை, பாதுகாப்பு, வர்த்தகம், மருத்துவம், சுற்றுலா, ஸ்டீல் உள்ளிட்ட துறைகள் குறித்து இரு நாட்டு பிரதிநிதிகளும் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். மேலும் இரு நாடுகள் இடையே சில ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளது.
அணு ஆற்றல் உள்ளிட்ட துறைகளில் ரஷ்யாவுடன் இந்தியா நெருங்கிய உறவை கொண்டு உள்ளது. ரஷ்ய தொழில்நுட்ப உதவுடன் கூடங்குளத்தில் முதல் 2 அணுசக்தி உலைகள் கட்டுப்பட்டு வருகின்றன.
மேலும் 3 மற்றும் 4வது உலைகளை அமைப்பது குறித்து ஆலோசித்து வருகின்றோம். கடந்த ஜூன் மாதம் கையொழுத்தான புதிய ஒப்பந்தபடி, ஹரியானாவில் அணுசக்தி ஆராய்ச்சி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது, என்றார்.