நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண தேசிய நீர் தொகுப்பு' ஏற்படுத்த கலாம் யோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாநிலங்களிடையே ஏற்பட்டுள்ள நதிநீர் பங்கீடு பிரச்சினைகளுக்கு தீர்வு காண, மத்திய அரசு புதிதாக தேசிய நீர் தொகுப்பு (நேஷனல் வாட்டர் கிரிட்) என்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆலோசனை தெரிவித்துள்ளார். இதன் மூலம் மாநிலங்களிடையே ஏற்படும் பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்திய தொழில்கூட்டமைப்பு சார்பில் வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு-2020' தேசிய மாநாடு புதன்கிழமையன்று சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடக்கிவைத்துப் பேசிய அப்துல் கலாம் கூறியதாவது :

உள்நாட்டு பிரச்சினை கூடாது

தண்ணீர் காரணமாக இந்தியாவில் உள்நாட்டு பிரச்சினை உருவாகி விடக்கூடாது. நம் நாட்டில் 1,500 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் போய் கலக்கிறது. இதில் குறைந்தபட்சம் 300 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி, முறையாக விவசாயத்திற்கு பயன்படுத்தினால், ஒட்டு மொத்த இந்திய நாடே செழிப்படைந்து விடும்.

நீர் மேலாண்மை அவசியம்

தற்போது 170 மில்லியன் லட்சம் பரப்பளவாக உள்ள விவசாய பாசன பகுதியின் அளவு பல்வேறு காரணங்களினால் 100 லட்சம் எக்டேராக குறைந்துவிடும். நதிநீர் பிரச்சினை இருந்து வரும் நிலையில் விவசாயத்திற்கு நீர் மேலாண்மை மிகவும் முக்கியம்.

தேசிய நீர் தொகுப்பு தேவை

தற்போது தேசிய அளவில் ரெயில்வே, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய மின்தொகுப்பு போன்ற அமைப்புகள் உள்ளன. இதேபோல், தேசிய நீர் தொகுப்பு (நேஷனல் வாட்டர் கிரிட்) என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தினால் நதிநீர் பங்கீடு தொடர்பாக எழும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

எந்த தனிநபரும் நாட்டை விட மேலானவர்கள் அல்ல. விவசாயத்தை மேம்படுத்த வேண்டுமானால் அதற்கென ஒரு தொலைநோக்கு திட்டம் தேவை. விவசாய பல்கலைக்கழகத்தினர், விஞ்ஞானிகள், விவசாயிகள் ஆகிய அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். நதிகளை இணைக்காவிட்டால், இந்த தொலைநோக்குத் திட்டத்தை எல்லாம் செயல்படுத்த முடியாது.

அமெரிக்காவில் மிசிசிபி ஆறு 32 மாநிலங்கள் வழியாக பாய்ந்தோடுகிறது. நதிநீரை பங்கீடு செய்வது தொடர்பாக 1802-ல் ஒப்பந்தம் போடப்பட்டது. மிசிசிபி நதியை பாதுகாக்கும் பணியை அமெரிக்க கடற்படை மேற்கொண்டு வருகிறது. இதேபோல் நம் நாட்டிலும் ஆறுகள் மற்றும் அணைகளை பாதுகாக்கும் பணியில் ராணுவமும், கடற்படையும் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

பசுமை புரட்சி

விவசாய உற்பத்தி திறனை அதிகரித்து இரண்டாம் பசுமை புரட்சியை ஏற்படுத்த வேண்டும். 2-வது பசுமை புரட்சியை அறிவு சார்ந்த விஷயங்கள் மூலமாத்தான் அடைய முடியும். விவசாய உற்பத்தியை அதிகரிப்பதுடன் உணவு பதப்படுத்துதல், கூட்டுறவு அமைப்புகள் மூலமாக விற்பனை போன்றவற்றிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

விவசாயிகளுக்கு ஆன்லைனில் தேவையான வேளாண் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வண்ணம் வேளாண்மை தகவல் மையங்கள் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அப்துல் கலாம் கூறினார்.

முல்லை பெரியாறு அணை பிரச்சினை தற்போது, தீவிரம் அடைந்து வரும் நிலையில், அப்துல் கலாமின் இந்த யோசனை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. மத்திய அரசு இவரது யோசனையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+