பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி மீதான புகார் வரதட்சனை பிரிவுக்கு மாற்றம்
சென்னை: பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரி வருண்குமார் மீது பிரியதர்சினி என்பவர் கொடுத்த புகாரினை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றி சென்னை மாநகர காவல்துறை ஆணையர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
வரதட்சணை ஒழிப்பு பிரிவு உதவி ஆணையர் சியாமளா இந்த மனு மீது விசாரணை நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கோகுல்சங்கரின் 2-வது மகள் பிரியதர்ஷினி. இவர் திருச்சியைச் சேர்ந்த பயிற்சி ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் மீது, தன்னை காதலித்து திருமணம் செய்வதாக ஏமாற்றி விட்டார் என்று புகார் மனு கொடுத்திருந்தார்.
தனது குடும்பத்தினரிடம் பணத்தை வாங்கி படித்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ள 2கிலோ தங்கம், 50 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் பிஎம்டபிள்யூ கார் ஆகியவற்றை வரதட்சணையாக கேட்பதாக தனது புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் மனுவை வடபழனி உதவி போலீஸ் கமிஷனர் சீனிவாசன் விசாரித்து வந்தார்.
வரதட்சணை புகாராக மாற்றம்
இந்த நிலையில் இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு காவல்துறை ஆணையர் திரிபாதி உத்தரவிட்டார். இதனையடுத்து இந்த புகார் மனு உடனடியாக சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு வியாழக்கிழமை இரவு மாற்றப்பட்டது.
வரதட்சணை ஒழிப்பு பிரிவு உதவி ஆணையர் சியாமளா இந்த மனு மீது விசாரணை நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.