திமுக முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி மேலும் ஒரு வழக்கில் கைது!
சென்னை: புழல் சிறையில் உள்ள திமுகவின் முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி மேலும் ஒரு நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.
2006-ம் ஆண்டு காணாமல் போன கே.வி.கே.குப்பத்தை சேர்ந்த மீனவர் செல்லத்துரை என்பவரை கொலை செய்த வழக்கு, வேலு என்ற மீனவர் மாயமான வழக்கு, திருவொற்றியூர் போலீஸ் நிலையம் முன்பு போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்ற குற்றவாளிகளுக்கு ஆதரவாக மறியல் செய்த வழக்கு, சினிமா சண்டை நடிகர் பரணிகுமார் என்பவரை தாக்கிய வழக்குகளில் முன்னாள் மீன் வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 25.9.2011 அன்று திருவொற்றியூரை சேர்ந்த ஜெயலட்சுமி என்ற பெண் கொடுத்த நிலமோசடி வழக்கிலும் கே.பி.பி.சாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
அவர் மீது நிலமோசடி வழக்கு தொடரப்பட்டுள்ள தகவல் புழல் சிறையில் உள்ள கே.பி.பி.சாமிக்கு தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவரை திருவொற்றியூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ், கே.பி.பி.சாமியை 30-ந் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
அதே நேரத்தில் இந்த வழக்கில் கே.பி.பி.சாமி சார்பில் அவரது வக்கீல்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற ஜனவரி 19-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
இதனையடுத்து முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி புழல் சிறைக்கே கொண்டு செல்லப்பட்டார்.