அணைப் பிரச்சினையால் நிறுத்தப்பட்ட கோவை – பாலக்காடு பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கியது
கோவை: முல்லைப் பெரியாறு அணை பிரச்னையால் கோவை – பாலக்காடு இடையே நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்து சனிக்கிழமை முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தால் தமிழ்நாடு – கேரளா இடையே கடுமையான பதற்றம் எழுந்தது. கோவையில் இருந்து கேரளாவிற்கு இயக்கப்பட்ட பேருந்துகள், லாரிகள் தாக்கப்பட்டன. அதேபோல் கேரளாவில் இருந்து கோவை வந்த வாகனங்களும் தாக்குதலுக்கு ஆளானது.
இதனால் பயணிகளின் பாதுகாப்பு கருதி, கடந்த ஒரு வாரகாலமாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் கோவையில் இருந்து கேரளாவின் பாலக்காடு பகுதிக்கு செல்ல வேண்டிய அரசுப் பேருந்துகள், வாளையாறிலேயே நிறுத்தப்பட்டன.
மீண்டும் தொடக்கம்
தற்போது பிரச்சினை எதுவுமின்றி அமைதி நிலவுவதை அடுத்து, சனிக்கிழமை காலை 9 மணி முதல் இருமாநில எல்லையைக் கடந்து, அரசு பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.வி. மோகன்குமார் தெரிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒவ்வொரு பேருந்தின் முன்னும் பின்னுமாக 2 போலீஸ் வாகனங்கள் செல்கின்றன. இதேபோல கேரள பகுதியில் இருந்தும் வாகனங்கள் வாளையாறு வழியாக கோவைக்கு வரத் தொடங்கியுள்ளன என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications