மாற்றுத் திறனாளிகளுக்காக 'ஊன்றுகோல்' திட்டம்: மதுரை கலெக்டர் சகாயம் அறிவிப்பு
மதுரை: மதுரை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் ஊன்றுகோல் சிறப்பு திட்டத்தை செயல்படுத்தவிருப்பதாக அம்மாவட்ட கலெக்டர் சகாயம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய உடல் பாதிப்பு காரணமாகவும், மற்றவர்கள் தங்களை ஒதுக்குகிற காரணத்தாலும் மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர். இதனால் அவர்கள் தங்களுடைய செயல்பாட்டில் ஜொலிக்க முடியாமல் போய் விடுகின்றனர்.
தங்களுடைய அன்றாட செயல்பாடுகளுக்கு நல்ல வழிகாட்டுதல் இல்லாமல் வாழ்வில் எந்தவித வெற்றியும் பெற முடியாமல் உள்ளனர். மாற்றுத் திறனாளிகள் மற்றவர்களைப் போல வாழ்க்கையில் பிரமிக்கத்தக்க வகையில் உயர்ந்து சாதனை படைக்க ஊனறுக்கோல் திட்டத்தை மதுரை மாவட்டத்தில் அமல்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்த திட்டத்தின்படி பள்ளி, கல்லூரிகளில் பயிலும் சக மாணவர்கள் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காக அன்றாட பணிகளில் உற்ற நண்பனாக உதவலாம். நல்ல நிலையில் உள்ள எல்லாரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த நண்பராகவும், வழிகாட்டியாகவும் இருந்து உதவ முடியும்.
மேலும் கல்லூரி முதல்வர்கள், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர்கள் இந்த திட்டம் பற்றி எடுத்துரைத்து அது சிறப்பாக செயல்பட உதவ வேண்டுகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.