வலுவான லோக்பாலை பாஜக விரும்பவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது- சோனியா
டெல்லி: லோக்பால் மசோதாவுக்கு அரசியல் சாசன அந்தஸ்து தரும் மசோதாவுக்கு ஆதரவு தருவதாகக் கூறிவிட்டு கடைசி நேரத்தில் அதை எதிர்த்து பாஜக வாக்களித்துள்ளது. இதன்மூலம் வலுவான லோக்பால் மசோதா விஷயத்தில் பாஜகவின் வேஷம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
லோக்பால் மசோதா நேற்றிரவு மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. ஆனால், லோக்பால் அமைப்புக்கு அரசியல் சட்ட அந்தஸ்து தருவதற்காக கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதா பாஜகவின் எதிர்ப்பால் தோற்கடிக்கப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசிய சோனியா காந்தி, லோக்பாலுக்கு அரசியல் சட்ட அந்தஸ்து தரும் மசோதாவை ஆதரிப்பதாக பாஜக எங்களிடம் உறுதிமொழி தந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அதை எதிர்த்து வாக்களித்து முதுகில் குத்தியுள்ளது.
நாங்கள் வலுவான லோக்பாலை உருவாக்க முயன்றோம். ஆனால், அதை பாஜக விரும்பவில்லை என்பது தான் இதன்மூலம் தெரிய வருகிறது. இதன்மூலம் பாஜகவின் உண்மையான முகம் வெளிப்பட்டுவிட்டது என்றார்.
ராஜ்யசபாவில் உங்களுக்கு போதுமான எம்பிக்கள் இல்லையே,, அங்கு எப்படி லோக்பால் மசோதாவை நிறைவேற்றப் போகிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டதற்கு, பதிலளிக்க மறுத்த சோனியா காந்தி, உங்களுக்கு எனது மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று சிரித்தபடியே கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.
பாஜகவுக்கு எதிராக ஹசாரே ஒரு வார்த்தை பேசமாட்டார்-திக்விஜய்:
இந் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங், ஊழல் நடைபெறும் மாநிலங்களில் லோக் ஆயுக்தவையும், லோக்பாலையும் பலப்படுத்துவதற்காக அரசியலமைப்பு திருத்த மசோதாவுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அத்வானியின் வீட்டு முன்பு அமர்ந்து ராஜ்யசபாவில் லோக்பால் மசோதாவை எதிர்க்க வேண்டாம் என்று பாஜகவினரை ஹசாரே வலியுறுத்தலாமே?. ஆனாஸ் பாஜக, ஆர்எஸ்எஸ்ஸுக்கு எதிராக ஹசாரே ஒரு வார்த்தை கூட பேசமாட்டார் என்றார்.