தானே புயல் பாதிப்பு - மத்திய அரசின் இடைக்கால நிவாரணம் அதிகரிக்கப்பட வேண்டும்: சீமான்
மதுரை: தானே புயலின் பாதிப்பில் சிக்கிய மக்களின் துயரத்தைப் போக்க மத்திய அரசு உடனடி நிவாரணமாக ரூ.2,000 கோடி வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தானே புயலால் கடும் பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.500 கோடி இடைக்கால நிவாரணம் மிகவும் குறைவானது.
தானே புயல் ஏற்படுத்திய பாதிப்பினால் கடலூர், விழுப்புரம், நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களி்ல் வாழ்ந்து வரும் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பும், ஏழை, எளிய மக்களின் வாழ்விடங்கள் சிதைவுக்குள்ளாகி உள்ளதும் அங்கு இயற்கை ஏற்படுத்திய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கூறி, ஒட்டு மொத்த இழப்பு ரூ.5,175 கோடி என்றும், அதனை முழுமையாக வழங்கிட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் வந்து பார்த்து மதிப்பீடு செய்த லோகேஷ் ஜா தலைமையிலான மத்திய அரசுக் குழு, இழப்பு ரூ.4,000 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறிய செய்தி நாளிதழ்களில் செய்தி வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக வெறும் ரூ.500 கோடியை அறிவித்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. மத்தியக் குழுவின் மதிப்பீட்டின் அடிப்படையில் 50 சதவீதமாவது இடைக்கால நிவாரணமாக உடனடியாக வழங்கிட மத்திய அரசு முன்வர வேண்டும்.
இலங்கையில் சிங்களர்கள் வாழும் பகுதிகளில் நிறைவேற்றப்படும் ரயில் திட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளிக்கும் மத்திய அரசு, சொந்த நாட்டில் இயற்கை பேரிடரால் பாதிப்பில் சிக்கிய மக்களின் துயரத்தைப் போக்க உடனடி நிவாரணமாக ரூ.2,000 கோடியை அளிக்க வேண்டும். நிவாரண தொகை பொங்கல் பண்டிக்கைக்கு முன்னர் மக்களை சென்றடையும் வகையில் அளித்திட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கின்றது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications