நிவாரணம் என்ற பெயரில் பிச்சை போட்டுள்ளனர், தூக்கி எறியுங்கள் பணத்தை-தங்கர்
பண்ருட்டி: முதல்வர் கடலூர் வந்தவுடன் ஒளி வீசும் என கூறினார். ஆனால் எங்கே ஒளி வீசியது. நிவாரணமாக அவர்கள் கொடுப்பது நமக்கு போடும் பிச்சை. வாங்கிய பணத்தை திருப்பி கொடுங்கள் என்று இயக்குநரும், தமிழக உழவர்சங்க கூட்டமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவருமான தங்கர்பச்சான் கூறினார்.
தங்கர்பச்சான் நேற்று பண்ருட்டி அருகே கொள்ளுக்காரன்குட்டை மெயின் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார். பின்னர் விவசாயிகள் மத்தியில் அவர் பேசுகையில்,
தமிழக உழவர் சங்க கூட்டமைப்பின் தலைவராக என்னை நியமனம் செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மீனவர் படகுகள், கரும்பு, வாழை, முந்திரி, பலா உள்ளிட்ட பயிர், பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
அரசியல்வாதிகள் சரியாக பார்வையிடாமல் உள்ளனர். நான் கூறியதன் பேரில் தமிழக முதல்வர் கடலூர் மாவட்டத்தை ஆய்வு செய்தார். குடிக்க ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை.
முதல்வர் கடலூர் வந்தவுடன் ஒளி வீசும் என கூறினார். ஆனால் எங்கே ஒளி வீசியது. நிவாரணமாக அவர்கள் கொடுப்பது நமக்கு போடும் பிச்சை. வாங்கிய பணத்தை திருப்பி கொடுங்கள்.
புயல் குறித்த பாதிப்புகளை எங்கள் சங்க பிரதிநிதிகளை அழைத்து முடிவு செய்ய வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் ஆழ்துளை கிணறு அமைக்க சட்டம் இயற்ற வேண்டும். தரமான விதைகள், இடுபொருட்கள், எந்திரங்கள் ஆகியவற்றை அரசே 10 ஆண்டுக்கு வழங்க வேண்டும். அனைத்து வேளாண் பொருட்களையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும். பாதிப்படைந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும்.
கல்வி செலவுகளை அரசு ஏற்க வேண்டும். பாதிப்படைந்த வீடுகளை புனரமைப்பு செய்ய வேண்டும். கால்நடைகள் வழங்க வேண்டும். என்.எல்.சி. நிறுவனம் 10 ஆண்டுக்கு கிடைக்கும் 11 ஆயிரம் கோடி நிதியை மாவட்ட மக்கள் மறுவாழ்வுக்கு தமிழக அரசுக்கு வழங்க வேண்டும்.
கடலூர் மாவட்டத்துக்கு மத்திய அரசு ராணுவத்தை அனுப்ப வேண்டும். கடலூர் அழகிரி எம்.பி. ராஜினாமா செய்ய வேண்டும். 70 சதவீத உழவர் குடும்பங்கள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளதால் பொங்கல் பண்டிகையை தள்ளி வைக்க வேண்டும் என்றார் அவர்.