சபரிமலையில் ஒரு நாள் முன்பே தெரிந்த ஜோதி: விசாரணைக்கு கேரளா உத்தரவு
சபரிமலை: சபரிமலையில் நேற்று முன் தினம் மாலையிலேயே ஜோதி தெரிந்ததால் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கேரள அரசு இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் கடக்கும் நாளில் மகர விளக்கு விழா நடைபெறும். இந்த ஆண்டு நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் சூரியன் இடம் பெயர்வதால், 15ம் தேதி மகர விளக்கு விழா நடைபெறும் என்று தேவசம் போர்டு அறிவித்தது.
ஆனால், கேரளாவில் ஒரு பிரிவு ஜோதிடர்களும், தந்திரி சமாஜத்தை சேர்ந்தவர்களும் 14ம் தேதியே மகர விளக்கு நடத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். ஆனால், இதை தேவசம் போர்டு நிராகரித்து விட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, வழக்கமாக ஜோதி தெரியும் இடத்தில் ஒரு வெளிச்சம் தெரிந்தது.
நேற்று நடந்த மகர விளக்கு விழாவை நேரடி ஒளிபரப்பு செய்வதற்காக தயாராகிக் கொண்டிருந்த டிவி கேமராமேன்கள் இதைப் படம் பிடித்தனர். இதை பக்தர்கள் பரவசத்துடன், சரணம் ஐயப்பா முழகத்துடன் தரிசனம் செய்ய ஆரம்பித்தனர்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தேவசம் போர்டு மகரஜோதி நாளைக்குத் தான், இப்போது தெரிவது மகர ஜோதி அல்ல என்று பலமுறை ஒலிபெருக்கியில் அறிவித்தும், பக்தர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. அவர்கள் தொடர்ந்து சரண கோஷம் எழுப்பியபடி தரிசனத்தைத் தொடர்ந்தனர்.
இதையடுத்து பொன்னம்பலமேட்டில் மகரவிளக்குக்கு ஒரு நாள் முன்னதாக வெளிச்சம் தெரிந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கேரள மாநில தேவசம் போர்டு அமைச்சர் சிவக்குமார் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், பொன்னம்பலமேட்டில் மகரவிளக்கு ஏற்றுவற்கு மலை அரையன்மார்களுக்கு உரிமை உள்ளது என்று கூறி அரசுக்கு வந்த மனு தேவசம் போர்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மலை அரையன்களுக்கு பொன்னம்பலமேட்டில் உரிமை உண்டு என்று அரசின் முதன்மை கண்ட்ரோலர் ஜார்ஜ் கூறிய கருத்து அரசின் கருத்து அல்ல.
மகரஜோதிக்கு ஒரு நாள் முன்னதாக பொன்னம்பலமேடு அருகே வெளிச்சம் கண்டது பற்றி உயர்மட்ட விசாரணை நடத்த கூடுதல் டிஜிபி சந்திரசேகரன் நாயருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட செயலை சபரிமலை மீது நம்பிக்கை கொண்ட எவரும் செய்திருக்க மாட்டார்கள்.
மத ஒற்றுமைக்காக பின்னணி பாடகர் யேசுதாஸ் ஏராளான தொண்டுகள் செய்துள்ளார். அவரது பாடல்கள் சபரிமலைக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அவரது ஹரிவராசனம் பாடல்தான் சபரிமலையில் நடை அடைக்கும் போது பாடப்படுகிறது. அவர் மத ஒற்றுமைக்காக பாடுபட்டமைக்காக யேசுதாசுக்கு "ஹரிவராசனம்' என்ற விருது வழங்கப்படுகிறது. சித்திரை விஷூ விழா காலத்தில் சபரிமலையில் வைத்து இந்த விருது வழங்கப்படும் என்றார்.