பிறந்த தேதி பிரச்சனை-மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ராணுவ தளபதி வழக்கு
ராணுவ தலைமைத் தளபதியாக பதவி வகித்து வருபவர், வி.கே.சிங் என்ற விஜயகுமார் சிங்கின் மெட்ரிகுலேஷன் சான்றிதழில், அவரது பிறந்த தேதி 1951ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், ராணுவப் பணிக்காக அவர் மத்திய பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி நடத்திய ராணுவ அகாடமி தேர்வு எழுதியபோது வி.கே.சிங்கின் பிறந்த தேதி மே 10, 1950ம் ஆண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேதியின்படி கணக்கிட்டால் வருகிற மே 31ம் தேதி அன்று வி.கே.சிங் ஓய்வு பெற வேண்டும்.
ஆனால், தனது பிறந்த தேதி 51ம் ஆண்டு தான் என்று கூறி வருகிறார் சிங்.
இந்தப் பிரச்சனையில், கடந்த சில மாதங்களாக அவருக்கும், மத்திய அரசுக்கும் இடையே இழுபறி நீடித்து வந்தது. தனது மெட்ரிகுலேஷன் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த தேதியைத்தான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரி, ராணுவ அமைச்சகத்துக்கு வி.கே.சிங் இரு முறை சட்டபூர்வமாக மனு அனுப்பியிருந்தார்.
ஆனால், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, சமீபத்தில் வி.கே.சிங்கின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.
மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து தலைமை ராணுவ தளபதி வி.கே.சிங் நேற்று உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். அவர் சார்பில் மூத்த வழக்கறிஞர் யு.யு.லலித் இந்த மனுவை தாக்கல் செய்தார்.
வி.கே.சிங் தாக்கல் செய்துள்ள மனுவில், 13 லட்சம் ராணுவ வீரர்களுக்கு தலைவர் என்ற முறையில் இந்த பிரச்சனை எனது நற்பெயர் மற்றும் நேர்மையுடன் தொடர்புடையது. என்னுடைய 36 ஆண்டு பணிக்காலம் மற்றும் பல்வேறு பதவி உயர்வுகளுக்கு பிறகு எனது பிறந்த தேதியை மாற்ற வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டது ஏன்?' என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
1971ம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் முக்கிய பங்கு வகித்த ஜெனரல் வி.கே.சிங், 2010ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி தலைமை ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்.
தவி உயர்வு பெற்றவர். பணியில் இருக்கும் தலைமை ராணுவ தளபதி ஒருவர் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.