காணும் பொங்கல் கோலாகலம்: சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்
நெல்லை: காணும் பொங்கலை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பொது மக்கள் குவிந்தனர்.
காணும் பொங்கலை முன்னிட்டு பாபநாசம், தலையணை, அகஸ்தியர் அருவி, பாபநாசம் அணைப்பகுதி, பாணதீர்த்த அருவி, மணிமுத்தாரு அருவி மற்றும் பூங்காக்களில் கூட்டம் அலைமோதியது. பாபநாசம், அம்பை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். மக்கள் அருவிகளில் குளித்துவிட்டு தாங்கள் கொண்டு வந்திருந்த உணவை பாறைகளில் அமர்ந்து உண்டு மகிழ்ந்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 865 வாகனங்களில் சுற்றுலா பயணிகள் பாபநாசம் மலைப் பகுதிக்கு வந்தனர்.
களக்காடு தலையணைக்கு காலை முதலே சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினர். கார்கள், வேன்கள், டூவிலர்களில் பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்தனர். அவர்கள் பச்சையாற்றில் குளித்துவிட்டு கரையில் அமர்ந்து சாப்பி்ட்டு உற்சாகத்துடன் காணும் பொங்கலை கொண்டாடினர். தலையணையில் புலிகள் காப்பக துணை இயக்குனர் சேகர் தலைமையில் வனத் துறையினரும், போலீசாரும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். தலையணை நுழைவு வாயில் அருகே தடை செய்யப்பட்ட மது, பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருகிறார்களா என கடும் சோதனை செய்யப்பட்டது. இதுபோல் களக்காடு பச்சையாறு அணை பகுதியிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
மேலும் குற்றாலம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய முக்கிய சுற்றுலாத் தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. தூத்துக்குடியில் முயல்தீவு, ராஜாஜி பூங்கா, ரோச் பூங்கா, நேரு பூங்கா, துறைமுக பீச் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடினர். அங்கு தங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் உணவருந்தி பொழுதை போக்கினர்.