'தானே' புயல் நிவாரணம் வழங்குவதில் குளறுபடி: கருணாநிதி குற்றச்சாட்டு
கேள்வி : புயல் நிவாரண நிதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஏடுகளில் செய்தி வந்திருக்கிறதே?
பதில் : ஆமாம்; கடலூரில் 'தானே' புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரணம் வழங்குவதில், மாவட்ட நிர்வாகத்தின் தெளிவான அறிவிப்பு இல்லாததால், ரூ.5 ஆயிரம் நிவாரணம் பெற வேண்டியவர்களுக்கு, குறைந்த தொகையும், சிலருக்கு நிதியே கிடைக்காத நிலையும் ஏற்பட்டுள்ளதாம்.
பண்ருட்டி வட்டம், புறங்கனி கிராமத்தைச் சேர்ந்த முந்திரி வியாபாரி, முருகன் என்பவர், "வீடுகளுக்கான நிவாரணத் தொகை வி.ஏ.ஓ. மூலம் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஆனால் எங்கள் பகுதியில், அரசு அலுவலர் அல்லாத தனி நபர்கள், ஊராட்சி மன்ற நிர்வாகிகள் பண பட்டுவாடா செய்கின்றனர். அவர்கள், பணம் தந்ததற்கான அத்தாட்சிக்கு வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்குகின்றனர். 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ள எங்கள் கிராமத்தில் 5 ஆயிரம் ரூபாய் தர வேண்டிய பலருக்கு 2500 ரூபாய்தான் தந்திருக்கிறார்கள், சிலருக்கு அத் தொகைக்கூடத் தரப்படவில்லை.
இந்தத் தொகையுடன் தர வேண்டிய அரிசி, மண்ணெண்ணெய், வேட்டி மற்றும் சேலை எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. அரசு அறிவித்த பயிர் இழப்பீடு தொகையும் எங்களுக்கு முழுமையாக கிடைக்கவேண்டும்" என்று கூறி இருக்கிறார். இதுபோல பலரும் பத்திரிகையாளர்களிடம் கூறி, ஏடுகளில் செய்தியாக வந்துள்ளது," என்று கருணாநிதி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.