ரூ. 2100 கோடியில் சென்னையில் தெற்கு, மேற்கு, வடக்குப் பகுதிகளை இணைத்து அவுட்டர் ரிங் ரோடு: ஜெ.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஒரு மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை நிர்ணயப்பதிலும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் சாலைகள் முக்கிய பங்காற்றுகின்றன. பயணிகள் மற்றும் சரக்குகளின் பாதுகாப்பான, சிக்கனமான மற்றும் விரைவான போக்குவரத்திற்கு சிறந்த சாலைகள் மிகவும் இன்றியமையாததாக விளங்குகின்றன. இதனை உணர்ந்த முதல்வர் ஜெயலலிதா திறனான மற்றும் பாதுகாப்பான பயணத்திற்கு ஏற்ற சாலைகளை அமைத்து மாநிலத்தின் அனைத்து தரப்பு மக்களும் சமூகப் பொருளாதார வளர்ச்சியினை அடைவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
எண்ணூர் துறைமுகம், சென்னை துறைமுகம், சென்னை நகரை ஒட்டியுள்ள பகுதிகளில் இயங்கிவரும் பல்வேறு தொழிற்சாலைகள், மற்றும் நிறுவனங்களுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சரக்குகளை ஏற்றி வரும் கனரக வாகனங்கள் மற்றும் பெட்டக வண்டிகள், நகரில் அன்றாடம் இயங்கும் போக்குவரத்து வாகனங்களுடன் இணைவதால் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு நெரிசலற்ற போக்குவரத்தினை ஏற்படுத்தும் வண்ணம், சென்னை மாநகரின் தென்பகுதி, மேற்கு பகுதி, மற்றும் வடக்கு பகுதிகளை இணைத்து புதியதாக வெளிவட்டச் சாலை கட்டம் ஐஐ அமைக்கும் பணிக்கு முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார்.
ஏற்கனவே சென்னை வெளிவட்ட சாலையின் முதறகட்டப் பணியான வண்டலூரிலிருந்து தொடங்கி தே.நெ.4ல நசரத்பேட்டை, தே.நெ.205ல நெமிலிச்சேரி வரையிலான 29.65 கி.மீ நீளத்திற்கு 1,081.40 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு பொது மற்றும் தனியார் பங்கேற்போடு வடிவமைத்தல், கட்டுதல், நிதி திரட்டுதல், செயல்படுத்தல், ஒப்படைத்தல் முறையில தனியார் நிறுவனத்தால் சாலைப் பணிகள் துவங்கப்பட்டு பணிகள் நடைபெறறு வருகின்றன. அனைத்து பணிகளும் நவம்பர் 2012க்குள் நிறைவு செயயப்படும்.
இதன் தொடர்ச்சியாக நெமிலிச்சேரி (தே.நெ.205) முதல் திருவொற்றியூர்-பொன்னேரி- பஞ்சட்டி சாலையில் உள்ள மீஞ்சூர் வரையிலுள்ள மீதமுள்ள 32 கீ.மீ நீளமுள்ள சாலையை இரண்டாம் கட்ட பணியாக 1,075 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த பணிகள், அரசு மற்றும் தனியார் கூட்டாண்மையின் கீழ் கட்டுதல், இயக்குதல் மற்றும் ஒப்படைத்தல் அடிப்படையில் ஆண்டு ஈவுத் தொகை செலுத்தும் முறையில் செயல்படுத்தவும், ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் மற்றும் பாலங்கள் மட்டும் அமைத்தால் மட்டும் போதுமானது அல்ல; அவை முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பது மிகவும் இன்றியமையாததாகும். நன்கு பராமரிக்கப்படும் சாலைகள் மற்றும் பாலங்கள் மூலம் தான் சீரான வாகனப் போக்குவரத்து ஏற்படவும், மற்றும் விபத்துக்கள் தடுக்கப்படவும் முடியும். இதனைக் கருத்தில் கொண்டு சாலைகள் மற்றும் பாலங்களின் பராமரிப்பிற்காக 285 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஒதுக்கீடு நெடுஞ்சாலைத் துறையின் மூலம் மாநிலம் முழுமைக்கும் சாலைகள் மற்றும் பாலங்களுடைய வழக்கமான காலமுறை பராமரிப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படும். மேலும், இவை தவிர சாலை புருவங்களை சீர் செய்தல், மண் திட்டுகள் அகற்றுதல், மழை நீர் வடிகாலுக்காக மண் வாய்க்கால்கள் அமைத்தல், சாலையோரங்களில் மரங்கள் நடுதல் மற்றும் பராமரித்தல் போன்ற பிற பணிகளும் செயல்படுத்தப்படும்.
மேற்கூறிய அரசின் நடவடிக்கைகளினால் சென்னை நகருக்கு பல திசைகளிலிருந்து வரும் கனரக வாகனங்கள் மற்றும் பெட்டக வண்டிகள் சென்னை மாநகருக்குள் நுழையாமல் எண்ணூர் மற்றும் சென்னை துறைமுகங்கள் மற்றும் சென்னை நகரை ஒட்டியுள்ள தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு எளிதாக சென்றடைய முடியும்.
இதனால் சென்னை மாநகரில் நெரிசலற்ற சீரான போக்குவரத்து அமையும். மேலும், சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவதினால் மக்களின் பயண நேரம் குறைக்கப்படுவதுடன், பெருமளவில் வாகனங்கள் பழுதடைவது மற்றும் விபத்துகள் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.